நிஜ குத்து சண்டை வீராங்கனையிடம் சிக்கிய மாதவன்!
மூன்றரை வருஷத்துக்கும் மேலாகிவிட்டது மாதவன் தமிழில் நடித்து! இன்னமும் அவரை சாக்லெட் பாய் ஊர் நம்பிக் கொண்டிருக்க, அவரோ முண்டாவை தட்டிக் கொண்டு குத்து சண்டைக்கு கிளம்பிவிட்டார். (எப்படியாவது அந்த சாக்லெட் இமேஜை அழிக்கணும் என்கிறார் அவரே) இத்தனை வருஷம் கழித்து அவர் நடித்து வெளிவரப்போகும் படம் இறுதிச்சுற்று. படத்தில் அவரோடு மோதப் போவது குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய வீராங்கனை ரித்திகா சிங்! பொண்ணு பார்ப்பதற்கு வேண்டுமானால் மணிரத்னம் பட ஹீரோயின் மாதிரி இருக்கலாம். ஆனால் நிஜத்தில், அவர் விட்ட குத்தில் மாதவனின் ஒரு பல்லே அபேஸ் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! (ரீல் விடலேங்க, இதை மாதவனே சொன்னார்)
குத்து சண்டையை முழு நேர தொழிலாக வைத்திருந்த அந்த பெண்ணை, சினிமா கெடுத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று சென்னையில் நடந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்தவடைம், “இனிமே குத்து சண்டையா, நடிப்பா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவர் என்ன சொன்னார் தெரியுமா? “நடிப்புதான்…!” ஆனால் சூடத்தை ஏற்றி சத்தியம் செய்தாலும் அவருக்கு இதுதான் முதல் படம் என்று யாரும் சொல்லப் போவதில்லை. தமிழில் இதற்கு முன்பு வந்து அழகு காட்டிய காஜல், தமன்னா, நயன்தாராவுக்கெல்லாம் சவால் விடுகிற அழகுப் பெண்தான் இந்த ரித்திகா!
வடசென்னை பெண்ணாகவே மாறி அவர் போட்டிருக்கும் அந்த குத்தாட்டம், அப்படியே அசர வைக்கிறது. இவரது பாக்சிங் கோச்சாக நடித்திருக்கிறார் மாதவன். படத்தை இயக்கியிருப்பது சுதா என்ற பெண் இயக்குனர். “சொன்னா நம்ப மாட்டீங்க, நாற்பத்தி நாலு நாட்களில் சுமார் 7000 ஆர்ட்டிஸ்டுகளை வச்சுகிட்டு இந்த படத்தை எடுத்து முடிச்சிருக்கார் அவர்” என்று சர்டிபிகேட்டினார் மாதவன்! (இவரும் மணிரத்னம் அசிஸ்டென்ட்தான்)
மான் கராத்தே, பூலோகம் போன்ற குத்து சண்டை படங்கள், ஆரோக்கியமாக கேஷ் பண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவ்வளவு தத்ரூபமாக அவ்வளவு முரட்டுத்தனமாக ஒரு படத்தை எடுத்திருக்கிறார் சுதா. இந்த படம் இந்தி, தமிழில் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறதாம். நிறைய பேர் இதை டப்பிங் படம்னு நினைச்சுகிட்டு இருக்காங்க. 99 சதவீதம் சென்னையில் எடுக்கப்பட்ட தமிழ் படம் என்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான சி.வி.குமார்!
எது வேணா இருந்துட்டு போகட்டும்…. நார்த் இண்டியா ரித்விகாவுக்கு சென்னையில வீடு பார்க்குற அளவுக்கு குதிரைய ஜெயிக்க வச்சுருங்கப்பா…!