நமீதா வரணுமா? முதலில் செய்ய வேண்டியது இதுதான்!
எண்ணி இருபது நாள்தான் இருக்கும்! அன்றிலிருந்தே ஒரு புது முடிவுக்கு வந்திருக்கிறார் நமீதா. ஹன்ட்ரட் கேஜி காம்பவுண்ட் சுவராக இருந்த நமீதா, அண்மைக்காலமாக சிக்ஸ்ட்டி கேஜி தாஜ்மஹால் ஆகிவிட்டார். எல்லாம் ஆயுர்வேதம் செய்த மாயம்! இவரது வியத்தகு உடல் குறைப்பை கண்டு முன்னணி நடிகைகளே மெர்சலாகிக் கிடக்கிறார்கள். காமாசோமா படங்களில் தலை(?) காட்டுவதில்லை என்கிற முடிவையும் உடனுக்குடன் எடுத்திருக்கும் அவர், கடைத் திறப்பு கொள்கையில் மட்டும் எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே வேகத்தில் செயல்பட்டு வருகிறார்.
அது கிடக்கட்டும்… அந்த இருபது நாள் மேட்டருக்கு வருவோம். திருவண்ணாமலையில் ஒரு ஷாப்பிங் மால் திறக்க போயிருந்தார் நமீதா. அந்த ஊர் காவல் துறை நமீதாவின் புகழ் பற்றி என்னதான் கணக்கு போட்டு வைத்திருந்ததோ? பீடி சைசில் இரண்டு கான்ஸ்டபிள்களை அனுப்பி, பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். ஆனால் என்ன விசித்திரம்? நடப்பது பில்டிங் திறப்பு விழாவா? அல்லது திருவண்ணாமலை தீபத் திருவிழாவா என்று ஐயுறுகிற அளவுக்கு பக்த‘கேடி’கள் திரண்டுவிட்டார்கள். நமீதா காரைவிட்டே இறங்க முடியாதளவுக்கு எண் திசையிலும் மக்கள் வெள்ளம்.
இவர் ரிப்பனை வெட்டுவதற்குள், ஷாப்பிங் மாலுக்குள் குழுமிய ரசிகர்கள், அங்கிருந்த எக்ஸ்கலேட்டரிலும் ஏறிவிட்டார்கள். சுமார் நூறு பேர் நின்றால் மட்டுமே இயங்கும் அதில், ஆயிரம் பேர் ஏறி நின்றால் என்னாகும்? பொசுகென புட்டுக் கொண்டது. அது சரிந்து கீழே விழ, அதிலிருந்த பாதி பேர் இதையே சாக்காக வைத்துக் கொண்டு நமீதாவின் மடி மேல் விழ முடியுமா என்று குருவி விஜய் போல இவர் பக்கம் தாவ…. இவர்கள் யாரையும் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய இரண்டு கான்ஸ்டபிள்களும், செய்வதறியாமல் பேய் முழி முழிக்க, நிமிஷ நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது அந்த களேபரம்!
குரங்கு புகுந்த வடை கடை போலாகிவிட்டது அந்த ஷாப்பிங் மால்! தெரியாம வந்து சிக்கிட்டமே என்று பதறிய நமீதா தனது காரை நோக்கி பாய ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அவரது செருப்பு இரண்டும் கூட்டத்தில் சிக்கிக்கொள்ள, அதில் ஒன்றை பற்றிக் கொண்ட ரசிகர் ஒருவர் எடுத்தாராம் ஓட்டம். ஹேய் மேன்… மை செப்பல் மை செப்பல் என்று அவர் அலறியும் கண்டு கொள்ளாத அந்த ரசிகர், அந்த அரிய பொக்கிஷத்தோடு எஸ்கேப் ஆகிவிட்டார். எப்படியோ வெறும் காலோடும், வேர்த்து விறுவிறுத்த அச்சத்தோடும் சென்னை வந்து சேர்ந்தார் நமீதா.
இப்போது என்னதான் முடிவெடுத்திருக்கிறார்? தன்னை விழாவுக்கு அழைக்கும் அன்பர்கள், அட்வான்ஸ் தொகையை கொடுக்க வரும்போதே உள்ளுர் காவல் துறையில் பாதுகாப்பு கேட்டு கொடுக்கும் மனுவின் ஜெராக்ஸ் காப்பி ஒன்றையும் எடுத்து வரச்சொல்கிறாராம். வெறும் பணத்தோடு வரும் அன்பு மச்சான்களுக்கு கால்ஷீட் இல்லை என்பதுதான் நமீதாவின் தெளிவான முடிவு.