அடக்கம் பண்ணுற வெட்டியானே ஆவியா உலவுனா, அந்த வெட்டியானோட ஆவிய அடக்கம் பண்ணுறது யாருதான்ப்பா…?
நல்ல டெக்னிக்பா இது. பேய் படம் பார்க்க எவனும் தனியா வர மாட்டான். ஒரு ஆளு இன்னொரு ஆளு துணையோட வந்தா கூட, ஒன் ப்ளஸ் ஒன்ணுன்னு கல்லா கட்டலாமே? இதுதான் இப்போதைய இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஐடியா போலிருக்கிறது. திரும்புகிற இடமெல்லாம் பேய் ஆவி சென்ட்டிமென்ட்தான். இந்த கோடம்பாக்க கலவரத்தில் மிக மிக சீரியஸ் ஆகவே ஒரு பேய் படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. படத்தின் பெயர் ‘நந்திவரம்’.
அடக்கம் பண்ணுற வெட்டியானே ஆவியா உலவுனா, அந்த வெட்டியானோட ஆவிய அடக்கம் பண்ணுறது யாருதான்ப்பா…? இப்படி ஒரு கேள்வியை உருவாக்குகிறது படத்தின் ஒன் லைன். யெஸ்… நந்திவரம் கிராமத்து வெட்டியானும் அவன் மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதற்கப்புறம் அந்த ஆவிகள் இரண்டும் தம்பதி சமேதராக அந்த கிராமத்து ஆட்களை போட்டுத் தள்ளுகிறார்கள். நிஜமாவே இந்த கொலைகளுக்கு காரணம் ஆவிகள்தானா? அல்லது வேறு யாராவது கிரிமினல்ஸ் இருக்கிறார்களா? தேடி கண்டு பிடிக்க வருகிறார் இன்ஸ்பெக்டர் ராமானுஜம். நிஜம் என்ன என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பிரபு ராமானுஜம்.
படத்தின் பெயர் மட்டும் நந்திவரம் இல்லை. காஞ்சிபுரம் அருகே நந்திவரம் என்றொரு கிராமமே இருக்கிறது. படப்பிடிப்பையும் அங்குதான் நடத்தியிருக்கிறார்கள். ஜெர்ஷா, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறதாம்.
நாடி நரம்பெல்லாம் டண்டணக்கரா போடுகிற அளவுக்கு படம் இருக்கும் என்கிறார்கள். பார்க்கலாம்…!