அட, சிம்பு இவ்ளோ நல்லவரா?
ஒரு பிளாஷ்பேக் அடிக்காமல் இந்த செய்திக்குள் வர முடியாது. வரவும் கூடாது. ஒருமுறை ரஜினியை பழம்பெரும் நடிகை மனோரமா கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். ஐயோ பாவம்… சொந்த விஷயம் ஒன்றுக்காக அப்படி செய்ய வேண்டியதாக இருந்தது அவருக்கு. அதற்கப்புறம் சினிமா இயக்குனர்கள் மனோரமாவை மெல்ல ஒதுக்க ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் அவருக்கு படமே இல்லை. இந்த நிலையில்தான் ‘நான் பழசையெல்லாம் மறந்துட்டேன்’ என்று உலகத்திற்கு சொல்லும் விதத்தில், மனோரமாவை தன் படத்தில் நடிக்க வைத்து தடையை உடைத்தார் ரஜினி.
ரஜினியளவுக்கு செல்வாக்கோ, பெரிய மனுஷத் தனமோ சிம்புவிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் ஒரு விஷயத்தில் ரஜினியை பின்பற்றி நடக்கிறாரோ என்கிற சந்தேகத்தை விதைத்திருக்கிறது அவரது செயல் ஒன்று. அதற்காக முன் கூட்டியே ஒரு பாராட்டை தெரிவித்துவிட்டு செய்திக்கு போவோம்.
பீப் சாங் வெளிவந்த நேரத்தில், இந்த செயலில் ஈடுபட்டவர்களை தூக்கில் போடணும் என்றார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். தனது பேட்டியில் கூட இதை தெரிவித்து கண்ணீர் மல்கினார் சிம்புவின் அம்மா உஷா. அதற்கப்புறம் அந்த பீப் சாங் விஷயத்தை சமூகம் ஆறப்போட்டுவிட்டது. மறுபடியும் எப்போது வெடிக்குமோ, அந்த அந்த சட்டத்துறைக்கே வெளிச்சம். இதற்கிடையில் சிம்பு அந்த காரியத்தை செய்திருக்கிறார்.
தனக்கு எதிராக கடுமையான கருத்துக்களை வெளியிட்ட ஒய்.ஜி.மகேந்திரனை, அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ட்ரிப்பிள் ஏ படத்தில் ஹீரோயினுக்கு அப்பாவாக நடிக்க அழைத்திருக்கிறாராம். இதற்கு ஒய்.ஜி.ஒப்புக்கொண்டாரா, இல்லையா? என்பதெல்லாம் இன்னும் விலாவாரியாக தெரியாவிட்டாலும், பகை மறக்கும் மனசுள்ள சிம்புவுக்கு ஒரு சபாஷ் போட்டுவிட வேண்டியதுதான்!