இருந்தாலும், பார்வதிக்கு இம்புட்டு ஆவாது!
நடிக்க வர்ற எந்த நடிகையிடம் கேட்டாலும், ‘நான் ஜோடி சேர ஆசைப்படுற ஹீரோ’ன்னு ஆரம்பிச்சு ரஜினி கமல் அஜீத் விஜய் விக்ரம் சூர்யாவோடு நிறுத்திக் கொள்வார்கள். அதற்கப்புறம் வருகிற எல்லாரும், இன்னும் டெவலப் ஆனதும் சொல்லிக்கலாமே என்பது காரணமாக இருக்கலாம். ஆனால் மேற்படி நடிகர்கள் யாரும் இப்படி வரும் புத்தம் புது நடிகைகளை சீண்டுவதேயில்லை. இவர்கள் படங்களும் ஹிட்டாகி மார்க்கெட்டில் அறுபது லட்சம் சம்பளத்தை தொடுகிற நேரத்தில்தான், ‘அந்த பொண்ணு கால்ஷீட் ஃப்ரியா இருந்தா பேசலாமே?’ என்பார்கள். அது போகட்டும்… இப்படி பேசுவது நடிகைகளின் ஸ்டைலோ, இல்லையோ? மார்க்கெட் யுக்திக்காக கூட இப்படியெல்லாம் பதில் சொல்லும் நடிகைகளுக்கு மத்தியில், பெரிய்ய்ய்ய்ய ஹீரோவான கமல் அழைத்தே திக் திக் ஆகாத நடிகை ஒருவர் உண்டென்றால் அவரை பற்றி என்னவென்று புகழ்வது?
பூ படத்தில் அறிமுகமான பார்வதி அந்த படத்தில் கொடுத்த பர்பாமென்ஸ் இருக்கிறதே, அது கால காலத்திற்கும் கைதட்டல்களுக்குரியது. அதற்கப்புறமும் அவர் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்தாரா என்றால் ம்ஹும். மரியான் படத்தில் தனுஷுடன் நடிப்பதற்கே அவருக்கு சில வருடங்கள் ஆனது. இவ்வளவு நல்ல நடிகை ஏன் பெரிய ஹீரோக்களுடன் ஜோடியாக நடிக்க முடியவில்லை? விசாரித்தால்தான் தெரிகிறது, பார்வதியின் கொலஸ்ட்ரால் பற்றி.
அதை விலா வலி எடுக்குமளவுக்கு விரிவாக சொல்லாமல் சுருக்கமாக சொன்னால் சட்டென்று புரிந்து கொள்வீர்கள். அண்மையில் தனது உத்தமவில்லன் படத்தில் நடிக்க கமல்ஹாசனே அழைத்தாராம் பார்வதியை. (இந்த ‘…னே’வுக்கு சற்றே அழுத்தம் கொடுக்கவும்) அவரிடம் பார்வதி சொன்ன பதிலென்ன தெரியுமா? முதல்ல கதையை சொல்லுங்க. பிடிச்சிருந்தா நடிக்கிறேன்.
அதற்கப்புறமும் பார்வதிக்கு கமல் கதையை சொன்னாரா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ள கமல் ஆபிசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டியதுதான். இருந்தாலும், பார்வதிக்கு இம்புட்டு ஆவாது!

