அந்தணர் முன்னேற்றக் கழகத்திற்கு அல்வா! மனு கொடுத்தும் ஒரு என்கொயரியும் இல்லை?
விஜய் ஆன்ட்டனியின் பிச்சைக்காரனுக்கு விதவிதமான வகையிலெல்லாம் சாப்பாடு!
படம் சம்பந்தப்பட்ட அவர்களே சும்மாயிருந்தாலும், “பிச்சைக்காரன்னு ஒரு படம் வந்திருக்கு. பாருங்க… பாருங்க…” என்று வம்படியாக இலவச விளம்பரம் செய்துவிடுவார்கள் போலிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன் குடுமி, பஞ்சகட்சம், பூணூல் சகிதம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த அர்ச்சகர்களை பார்த்தவர்களுக்கு, “ஐயோ பாவம். சொசைட்டிக்கு இவாளால ஒரு சங்கடமும் இல்ல. அருவா தூக்க மாட்டா, ஆணவக் கொலை பண்ண மாட்டா. முக்கியமா பேட் வேர்ட்ஸ் யூஸ் பண்ண மாட்டா… இவா ஏன் இங்க?” என்ற கேள்வி அடுக்கடுக்காக மனதில் எழுந்திருக்கும். அவர்கள் வேறு யாருமல்ல, ‘அந்தணர் முன்னேற்றக் கழகம்’ என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்.
அப்படி வந்தவர்கள் ஒரு மனுவை எழுதி அதிகாரிகள் கையில் கொடுத்துவிட்டு “எல்லாத்தையும் பகவான் பார்த்துப்பான்” என்றபடி கலைந்து போய்விட்டார்கள். மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன? “பிச்சைக்காரன்னு ஒரு படம் வந்திருக்கு. அதுல எங்களையும் பிச்சைக்காரங்களையும் ஒண்ணா வச்சு ஒரு சீன் வருது. அதை வன்மையா கண்டிக்கிறோம். அந்த காட்சியை கட் பண்ணிட்டேள்னா நன்னா இருக்கும்” என்று கூறப்பட்டிருக்க, “கண்டிப்பா என்னன்னு பார்க்குறோம் சாமீ. போயிட்டு வாங்க” என்று அனுப்பி வைத்திருந்தார்கள் அதிகாரிகள்.
அதற்கப்புறம் படத்தின் இயக்குனர் சசிக்கோ, ஹீரோ விஜய் ஆன்ட்டனிக்கோ, படத்தை வெளியிட்ட கே.ஆர்.பிலிம்ஸ் சரவணனுக்கோ ஒரு என்கொயரியும் வரவில்லை. மேற்படி காட்சிகள் ஜாம் ஜாமென்று அப்படியே இருக்க, நினைத்தபடியே மேற்படி காட்சி திரையில் தோன்றும் போது விழுந்து விழுந்து சிரிக்கிறார் திருவாளர் பொதுஜனம்.
இதுவரைக்கும் பிச்சைக்காரன் படத்தின் வசூல் பத்து கோடியை தாண்டிவிட்டதாக கூறுகிறது புள்ளி விபரம்! இந்த வாரம் வெளிவந்த பிற படங்களின் வசூலை விட பிச்சைக்காரனின் வசூல் டாப்போ டாப்.
தெரிஞ்சேதான் இப்படியொரு பேரு வச்சுருக்காங்க போலிருக்கு!