நாலே நாளில் நாலு கோடி! பேய் வசூலில் பிசாசு!
ஆவிகளுக்கு படையல் போடும் சீசன் போலிருக்கிறது இது. திரும்பிய இடமெல்லாம் பேய் பிசாசு படங்கள்தான். இந்த விதையை கோடம்பாக்கத்தில் முதன் முதலில் விதைத்த ராகவேந்திரா லாரன்ஸ் இன்னும் தன் முனி பார்ட் 3 யை தியேட்டருக்கு விடுவதில் மெத்தனம் காட்டிக் கொண்டிருக்க, நடுவில் வந்த பேய் பிசாசு பில்லி சூனிய படங்களுக்கெல்லாம் வரவோ வரவு. அதிலும் சமீபத்தில் வெளிவந்த பிசாசு பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறதாம்.
ஆவியை அழுக்கு போக துவைத்து லிரில் வெண்மையோடு காட்டிய படங்களைதானே பார்த்திருப்போம். இதில் மிஷ்கினின் அப்ரோச் வேறு மாதிரி. அவள் போட்டிருக்கும் கவுன் கூட அழுக்கு. இருந்தாலும், பளிச்சென்று மனசில் பதிந்துவிட்டாள் அந்த ஆவி. பார்த்தவர்கள் எல்லாரும், அட நல்லாயிருக்கே போட நாடெங்கிலும் திமுதிமு கூட்டம் படத்திற்கு. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சமயத்தில் தயாரிப்பாளர் போஸ்டர் ஒட்டுகிற விஷயத்தில் அலட்சியம் காட்டினார் என்று தானே களத்தில் இறங்கி பசையை தடவினார் மிஷ்கின். இந்த முறை படத்தை நாடெங்கிலும் வெளியிட்டிருப்பது இராம.நாராயணனின் மகன் முரளி. திரும்புகிற இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் பரபரக்க, வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது பிசாசு.
படம் வெளியான நான்கே நாட்களில் நாலு கோடி வசூல் செய்திருக்கிறதாம் பிசாசு. இப்படி படம் வசூலில் டபுள்ஸ் காட்டிக் கொண்டிருப்பதால், மிஷ்கின் ஹேப்பி அண்ணாச்சி….!