பல கோடி கைமாற்று? கால்ஷீட் தராமல் ஏமாற்று! தயாரிப்பாளரை புலம்ப விட்டாரா விஜய்?
சமீபகாலங்களில் விஜய்யிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சிம்புவின் ‘வாலு’ படத்திற்கு தாமாகவே முன் வந்து உதவிய அவரது பெருந்தன்மை, டி.ராஜேந்தரால் மட்டுமல்ல, வெளியே நின்று வேடிக்கை பார்த்த மனிதர்களின் வாயாலும் பரணி பாடப்பட்டதை நாடே அறியும். அதோடு நிறுத்திக் கொண்டாரா அவர்? கவுண்டமணியின் ‘49 ஓ’ படம் வெகு நாட்களாக பெட்டிக்குள்ளேயே கிடக்கிறது. அதையும் தூசு தட்டி வெளியே வர தன்னால் ஆன சிறு உதவியை செய்தார் என்று காதை கடிக்கிறது சினிமா வட்டாரம்.
பொதுவாக வெளியிடங்களுக்கு வந்தால், முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிற போஸ்சில் நிற்பவர், மனதார சிரிக்க ஆரம்பித்திருப்பதே பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது இங்கே. வயதும், அதற்கேற்ற அழகுமாக நாளுக்கு நாள் முன்னேறிக் கொண்டிருக்கும் விஜய்யின் க்ளீன் இமேஜில், நாலைந்து மாதங்களாகவே பந்தை எறிந்து பல பீஸ்களாக அந்த இமேஜை உடைத்துக் கொண்டிருக்கிறார் அந்த விருது தயாரிப்பாளர்.
விஜய்யை வைத்து அவர் ஒரு படம் தயாரித்தார் அல்லவா? அப்போது சுமார் பதினைந்து கோடிக்கும் மேல் கைமாற்றாக வாங்கினாராம் எஸ்.ஏ.சி. அதை இன்னும் அவர் தரவேயில்லை. சரி… கால்ஷீட்டாவது கொடுப்பார்கள் என்று காத்திருக்கிறேன். அதற்கும் வழியில்லை என்று போகிற வருறவர்களிடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம். அடுத்த படமாவது எனது நிறுவனத்திற்கு செய்யுங்கள் என்று அவர் கேட்டபோதும், அடுத்தடுத்து வேறு வேறு கம்பெனிகளுக்கு விஜய் கால்ஷீட் சென்று கொண்டிருப்பதால், கடும் அப்செட் அவர்.
“ஏற்கனவே வாசல்ல நோட்டீஸ் ஒட்டிட்டு போயிட்டான். சம்பந்தமேயில்லாத கவுண்டமணிக்கும் சிம்புவுக்கும் கை கொடுக்கிற விஜய், நம்ம வாசல்ல இருக்கிற நோட்டீசை கிழிச்சா என்னவாம்?” என்கிறது அவரது புண்பட்ட மனசு. ஐயோ பாவம்… கை கொடுங்க விஜய்!