புலிக்கு ட்ரபுள்? ஆரம்பித்தது அரசியல்!
‘சொரியாசிஸ் வந்தவன் நகம் வளர்த்தேயாகணும்’ என்பது தலையெழுத்து! அரசியல் ஆசை இருக்கிற அத்தனை நடிகர்களுக்கும் சொரியாசிஸ் நிலைமைதான்! எதிர்ப்பை சமாளிக்கிற வித்தை தெரிந்திருந்தாலொழிய நிம்மதியாக உறங்கக் கூட முடியாது. கிட்டதட்ட விஜய்யும் அப்படியொரு சிக்கலில்தான் இருக்கிறார். அவரது படங்கள் ரிலீஸ் ஆகும் போதெல்லாம் எங்கிருந்தாவது யாரையாவது தூண்டிவிட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். அவரும் சாம பேத தான தண்டம் அழுதுதான் தப்பிக்கிறார். இந்த முறை புலிக்கும் அப்படியொரு சிக்கலை ஏற்படுத்துவார்களோ என்கிற அளவுக்கு அச்சம் நிலவி வருகிறது.
வேறொன்றுமில்லை… அண்மையில் சட்டமன்றத்தில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. எழுப்பியவர் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ ஒருவர். காவிரி விவகாரம், மீத்தேன் பிரச்சனை, முல்லை பெரியார், ஓக்கேனக்கல் என்று உருப்படியான விஷயங்களை மட்டுமே விவாதிக்கிற குணம் கம்யூனிஸ்ட்களுக்கு உண்டு. ஆனால் இவர் கேட்டது என்ன தெரியுமா? தியேட்டர்களில் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. இதனால் தியேட்டர் வாசலில் குறைந்த பட்ச கட்டணம் எவ்வளவு? அதிக பட்ச கட்டணம் எவ்வளவு? என்பதை வெளிப்படையாக எழுதி வைக்க வேண்டும். அதை தாண்டி வசூலிக்கிற தியேட்டர்கள் மீது கடும் நடவக்கை எடுக்க வேண்டும் என்று!
இதற்கு துறை ரீதியான பதிலும் அளித்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. உடனடியாக அதில் கவனம் செலுத்தப்படும் என்பதுதான் அவரது பதிலின் சாரம்சம். நமது சந்தேகமெல்லாம் இதுதான். விஜய் படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் இப்படியொரு கேள்வியும் பதிலும் பிறந்திருப்பதால், வச்ச குறியில் சிக்கப் போவது புலியாக கூட இருக்கலாமோ?
கிட்டதட்ட அறுபது கோடி வரைக்கும் தமிழ்நாடு தியேட்டரிக்கல் உரிமை விற்கப்பட்டிருக்கிறது. இந்த பணத்தை மீட்க வேண்டும் என்றால் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் படம் போடவே முடியாது. சிறு தியேட்டர்களிலும் 200 அல்லது 300 வசூலித்தால் போட்ட பணத்தை மீண்டும் எடுக்க முடியும். இவ்வளவு பெரும் தொகையை செலுத்துகிறவர்கள் இந்த சட்டமன்ற கேள்வி பதிலால் எத்தகைய திகிலுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை விவரிக்க தேவையில்லை.
புலி உறுமுமா? பொறுத்திருந்து பார்க்கலாம்…
MY HUMBLE APPEAL TO TAMIL NADU GOVERNMENT,
PLEASE BAN THIS IDIOTIC MOVIE “PULI”