45 நிமிடங்கள்… விஷாலிடம் கேள்வி மேல் கேள்வி கேட்ட ரஜினி!
தமிழ்சினிமாவின் நேற்றைய பளபளப்பு கபாலி என்றால், அதற்கு முந்தைய நாள் பளபளப்பு, விஷால் குழுவை ரஜினி கமல் இருவரும் சந்தித்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்ததுதான். ஓட்டு வேட்டைக்காக மட்டுமல்ல, மூத்த நடிகர்கள்…. தமிழ் சினிமாவின் அடையாளங்கள் என்று போற்றப்படும் அவ்விருவரையும் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்றே கிளம்பினார்கள் விஷால் கோஷ்டியினர். இவர்கள் வருகிறார்கள் என்றதும் ரஜினி வீட்டின் கதவு திறந்தேயிருந்ததாம்.
சுமார் முக்கால் மணி நேரம் விஷால், கார்த்தி, பொன்வண்ணன், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோரிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் ரஜினி. அப்போது சங்கம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களை அடுக்கடுக்காக கேட்டாராம் எல்லாவற்றுக்கும் தெளிவாக பதிலளித்தார்களாம் இவர்கள். சங்க கையிருப்பு இப்போ எவ்ளோ இருக்கு? என்று ஒரு கேள்வி கேட்ட ரஜினி, கலைநிகழ்ச்சியெல்லாம் நடத்தி பணம் வசூலிச்சோம். ஆனால் பிரச்சனை தீரலையே என்று கவலைப்பட்டதாகவும் சந்திப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியாவது 45 நிமிடங்கள்தான் பேசினார். கமல் சுமார் இரண்டரை மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாராம். தனது கோபத்தையும் ஆதங்கத்தையும் அந்த நேரத்தில் கொட்டியவர், நான் வெளிப்படையா உங்களுக்கு ஆதரவா களமிறங்க தயாரா இருக்கேன் என்றும் கூறியிருக்கிறார். அதோடு விட்டாரா? இந்த கட்டிடத்தை நாமளே கட்டி முடிக்கிறோம். பத்து புளோர் கட்டிடத்தில் ஒவ்வொரு புளோர்லேயும் இது இருக்கணும். அது இருக்கணும் என்று லிஸ்ட் போட, கண்களில் வெற்றி மின்னல் ஜொலிக்க திரும்பியிருக்கிறது விஷால் கோஷ்டி.
இதன் தொடர்ச்சியாக நாடக நடிகர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் கமல் உரையாற்றவும் கூடும் என்பதுதான் இறுதியாக கிடைத்த பரபரப்பு தகவல்!