ரஜினி கமல் மட்டுமில்ல… அடையாளம் தெரியாத ஆளுங்கள கூட விடமாட்டாங்க போல?
விட்டால் மேஸ்திரிகள் யூஸ் பண்ணும் ரச மட்டத்தை எடுத்து நடு மண்டையில் போட்டிருப்பார் போலிருக்கிறது. அப்படியொரு கோபமும் வேகமுமாக பேட்டியளித்தார் தயாரிப்பாளர் எவர்கிரீன் சண்முகம். என்னவாம் பிரச்சனை? இவர் தயாரித்திருக்கும் ‘அஞ்சுக்கு ஒண்ணு’ என்ற படம் கட்டிட தொழிலாளர்களின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இந்த தொழிலாளர்களை படத்தில் பாலியல் ரீதியாக கேவலப்படுத்தியிருப்பதாக நினைத்த கட்டிட தொழிலாளர் சங்க பொறுப்பாளர் பொன்.குமார் படத்தை தடை செய்யும் படி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
முறைப்படி சென்சார் அனுமதி பெற்றிருக்கும் இந்த படத்தை தடை செய்ய சொல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இதுதான் எவர்கிரீன் சண்முகத்தின் கேள்வி. அதுமட்டுமல்ல, தினந்தோறும் போன் மிரட்டல்கள் வருவதாகவும் குற்றம் சாட்டுகிறார் அவர். ‘நீங்க ஏன் போலீசுக்கு போகக் கூடாது?’ என்ற கேள்விக்கு, “நாங்க ஏன்ங்க போணும்? தினமும் ஒருத்தன் படத்தை வெளியிடாதேன்னு சொல்லுவான். அதுக்கெல்லாம் பதில் சொல்றதும் போலீஸ் ஸ்டேஷன்ல போய் நிக்கறதுமா எங்க வேலை? அதனால்தான் உங்களை கூப்பிட்டு விஷயத்தை சொல்றோம்” என்றார் அவர். (அஞ்சுக்கு ஒண்ணோ என்னவோ? இவர் பேச்சு மட்டும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு)
தொடர்ந்து பேசியவர் ஒரு கண்டன அறிக்கையையும் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது-
11/09/2015 தினகரன் நாளிதழில் கட்டிட தொழிலாளர் மத்திய சங்க தலைவர் திரு.பொன்குமார் அவர்கள் பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த ” அஞ்சுக்கு ஒண்ணு ” திரைப்படத்தில் சித்தாள் பெண்களை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டதாக தவறான தகவலை பத்திரிக்கை வாயிலாக தெரியப்படுத்தியதற்கு கண்டணம் தெரிவிக்கிறோம்.மேலும் இப்படத்தை பார்க்காமலேயே தணிக்கைகுழுவினரால் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை நீக்க சொல்வதற்கு திரு.பொன்குமார் அவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. அப்படியே சித்தரிக்கப்பட்டிருக்குமாயின் திரு.பொன்குமார் அவர்கள் தயாரிப்பாளரையோ அல்லது இயக்குநரையோ தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம்.அல்லது திரைப்பட சங்கத்தையோ,இயக்குநர் சங்கத்தையோ தொடர்புகொண்டு நியாயத்தை கேட்டிருக்கலாம்.
அதையெல்லாம் விட்டுவிட்டு பத்திரிகை வாயிலாக திரைப்படத்தை விமர்சிப்பதற்கும், தடைசெய்யகொருவதற்கும் இவர் யார்?இதனால் தயாரிப்பாளர் திரு எவர்கிரீன் S.சண்முகம் அவர்களுக்கும் திரு.ஆர்வியார் இயக்குநர் அவர்களுக்கும் ஏற்படும் நஷ்டத்தை திரு பொன்குமார் அவர்கள் ஏற்றுகொள்வாரா?எதற்காக பொய்யான விமர்சனத்தை வெளியிட வேண்டும்.இத்திரைப்படம் வெளியிடுவதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருக்கையில் இவருடைய விளம்பரத்தால் வியாபாரத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.திரு.பொன்குமார் அவர்கள் இப்படி ஒரு விமர்சனத்தை வைக்க என்ன காரணம். சுய விளம்பத்திர்காக திரைப்படத்தை விமர்சிக்கிறாரா?இல்லை தயாரிப்பாளரை மிரட்டி லாபம் தேட முயலுகிறாரா?இப்படியே ஒவ்வொரு இயக்கமும் காரணமே இல்லாமல் போர்க்கொடி தூக்கினால் திரைப்படத்துறையின் நிலை என்ன?திரைப்பட துறையை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலைமை என்ன? இத்தொழிலை நம்பி பணம் முதலீடு செய்யும் முதலாளியின் நிலை என்ன?
ஏற்கனவே தயாரிப்பாளர் சங்கத்தில் ஆயிரம் குடைச்சல். குடைச்சலோடு குடைச்சலாக இந்த மேஸ்திரி சித்தாள் பிரச்சனையும் கையில் எடுத்துக் கொள்வார்கள் போலிருக்கிறது.