காப்பாத்துங்க… போலீஸ் கமிஷனரிடம் ‘ரோமியோ ஜுலியட்’ மனு
ஒரு படம் திரைக்கு வந்து அடுத்த ஷோ ஆரம்பிப்பதற்குள், ‘தம்பி… அமரர் ஊர்திக்கு போன் பண்ணு’ என்கிற அளவுக்கு ‘கொலகார’ ரசிகர்கள் பெருகி சினிமாவை கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணாயில் ஊற்றி எரித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் லேசாக பிக்கப் ஆகி நன்றாக ஓட ஆரம்பித்திருக்கும் ரோமியோ ஜுலியட் படத்திற்கு உடனடியாக திருட்டு விசிடிகள் வந்தால் தயாரிப்பாளர் பாடு என்னாவது? ஒருபுறம் பிரஸ்சை அழைத்து, நாங்க ஜெயிச்சுட்டோம்… என்று சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் ஆப்சென்ட்.
எங்க சார் அவரு? என்றால், கமிஷனர் ஆபிசுக்கு போயிருக்காருங்க என்றார் ஜெயம் ரவி. என்னவென்று விசாரித்தால்தான் மேற்படி திருட்டு விசிடி விவகாரம் வெளியே தெரிய வருகிறது. கண்கலங்காம போங்க. கட்டுப்படுத்துறோம் என்று கூறியிருக்கிறார்களாம் அங்கே. அடித்துபிடித்துக் கொண்டு கடைசி நேரத்தில் ஓடி வந்தார் தயாரிப்பாளர். இந்த பிரஸ்மீட்டில் ஓவர் உணர்ச்சி நிலையிலிருந்தார் ஜெயம் ரவி. ‘நான் ஹிட் கொடுத்து ரொம்ப நாளாச்சு. இந்த படம் வந்து அந்த குறையை போக்கியிருக்கு. ஐ ஆம் ஹேப்பி’ என்றார் பொங்கி வரும் புன்னகையை அடக்கிவிடாமல்.
படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்ட காஸ்மோ வில்லேஜ் பிக்சர்ஸ் சிவகுமார், இந்த படம் தயாரிப்பிலிருக்கும் போதே நல்லா ஓடும்னு தெரிஞ்சுது. அப்பவே படத்தை வாங்கிட்டேன் என்றார். ஜெயம் ரவிகிட்டயும் ரொம்ப நாளா கால்ஷீட் கேட்டுகிட்டு இருக்கேன். அவர் ஓகேன்னா நேரடியாக அவரை வச்சு ஒரு படம் தயாரிக்கலாம்னு இருக்கேன் என்று இவர் சொல்ல சொல்ல, ரவி முகத்தில் சந்தோஷம்.
அதுக்கென்ன… கொடுத்துட்டா போச்சு என்று சொல்ல முடியாத நிலைமை அவருக்கு. ஏன்? அண்ணனையும் அப்பாவையும் கேட்காமல் எப்போது முடிவெடுத்தார் ரவி? காஸ்மோ சார்… கமுக்கமா அண்ணனை பார்த்து காரியத்தை முடிங்க….