சந்தானத்தின் பெரிய மனசு! ஆசி வழங்குமா நாகேஷ் ஆத்மா?
குடைக்குள் ஒதுங்க இடம் கொடுத்தவனை கூட, கூசாமல் மழைக்குள் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிற காலம் இது. இங்கு சந்தானம் போல, அதர்வா போல ஒரு சிலர் இருப்பதால்தான் மழை வருகிறது போலும்.
தன்னை முதன் முதலில் பாணா காத்தாடி மூலம் அறிமுகப்படுத்திய இயக்குனருக்கு, தான் சொந்தமாக சினிமா கம்பெனி ஆரம்பித்ததும் முதல் வாய்ப்பு கொடுத்து நன்றி பாராட்டியிருக்கிறார் அதர்வா. இப்பவும் தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் என்ற ஒரே காரணத்திற்காக சிம்புவுக்கு தேவைக்கு அதிகமாக மரியாதை கொடுப்பதுடன், தேவைப்படும் போதெல்லாம் கால்ஷீட்டும் கொடுத்து கவுரப்படுத்துகிறார் சந்தானம். குவாலிட்டி கோவிந்தன்களாக இப்படி மனசுக்குள் மலை கட்டி உட்கார்ந்திருக்கும் இவர்களில், சந்தானத்தின் இன்னொரு செயல்பாடு நிஜமாகவே ஆஹா, ஓஹோதான்!
காலத்தால் அழிக்க முடியாத காமெடி கிங் நாகேஷை தெருவுக்கு தெரு சிலை வைத்து கொண்டாடினாலும் தகும். ஆனால் அவருக்கு ஒரு நினைவிடமும் இல்லை. நினைப்பதற்கு ஒருவருக்கும் நேரமும் இல்லை. அவரது வாரிசுகளிடம், “வாங்க சினிமாவுக்கு” என்று நம்பி அழைக்கிற பெரிய இயக்குனர்கள் என்று கூட ஒருவரும் இல்லை. இந்த நிலையில்தான் தனது சர்வர் சுந்தரம் படத்தில் நாகேஷின் இளைய பேரனை நடிக்க வைத்திருக்கிறார் சந்தானம்.
நாகேஷின் ஆத்மா எங்கிருந்தாலும் சந்தானத்தை ஆசிர்வதிக்கும்!