ஏம்ப்பா… டீ ஆத்துறதுன்னா அவ்ளோ கேவலமா பூடுச்சா?
‘மோடி ஒரு காலத்துல டீ ஆத்துனவருதானே?’ என்கிறார் ராகுல். ‘ஏன் டீ ஆத்துனா கேவலமா?’ என்கிறார் மோடி. இப்படி தேசிய அரசியல் வரைக்கும் டீ யாவாரம் சுட சுட நடந்து கொண்டிருக்க, சினிமா யாவாரத்திலும் டீ க்கடை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள் சிலர். அதிலும் முக்கியமாக சந்தானம்.
கடந்த வாரம் அவர் நடத்திய பிரஸ்மீட் வேறு எந்தெந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கொடுத்ததோ தெரியாது. ஆனால் ‘நான் வளர்றது ரொம்ப பேருக்கு பிடிக்கல’ என்கிற விஷயத்தை மட்டும் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் மீடியாவுக்கு சொன்னார் சந்தானம். ‘வசதியான பெரிய ஆளா இருந்தாலும், இந்த படம் ஓடக் கூடாதுங்கிற நினைப்போடவே என்னை பாராட்ட வந்தா கண்டிப்பா என்னால வளர முடியாது. ஆனால் சாதாரண டீ கடையில வேலை செய்யுற ஒருத்தர் நான் வளரணும்ங்கற நல்ல மனசோட வந்து வாழ்த்துனா நான் வளர்வேன். அதனால் எனக்கு அவங்களை விட இவங்களதான் ரொம்ப புடிக்கும் என்றார் சந்தானம்.
சந்தானத்தில் இந்த சர்க்கரை பால் பேச்சில் கொஞ்சம் டிகாஷனை ஊற்றி சந்தோஷப்பட ஆரம்பித்திருக்கிறார்கள் டீக்கடை வாசிகள். ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஸ்டிக்கர்கள் இப்போது டீக்கடைகளையும் அலங்கரிக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்கு சந்தானத்தின் டீ மாஸ்டர் பேச்சுதான் காரணம் என்றாலும் தப்பில்லை.
வளர்றவங்க உளறுனா கூட, உளர்றவங்களை வளர வைக்கறதுதான் நம்ம தமிழனோட ஸ்டைல்.