செம்மர கடத்தல் வழக்கில் சரவணன் கைதாம்… வதந்தியை கிளப்பியவன் எவண்டா?

தமிழகத்தையும் ஆந்திராவையும் உலுக்கி வரும் அண்மைகால அதிர்ச்சி 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்தான். செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக சுட்டுக்கொல்லப்பட்ட அந்த தமிழர்கள் அனைவரும் அப்பாவிகள் என்றும், அவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கடைசியில் கொல்லப்பட்டதாகவும் தொடர்ந்து ஊடங்களில் ஆதாரங்களையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையை மத்திய மாநில அரசுகள் வழங்க வேண்டும். சுடச் சொல்லி உத்தரவிட்ட முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வதந்தியாளர்கள் விளையாடி விட்டார்கள்.
அய்யோ பாவம்… இந்த பிரச்சனையில் சிக்கிக் கொண்டார் பருத்தி வீரன் சரவணன். செம்மர கடத்தலில் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை ஆந்திர போலீசார் கைது செய்துவிட்டதாகவும் வாட்ஸ் அப்புகளில் கொளுத்தி போட ஆரம்பித்துவிட்டார்கள் அந்த வதந்தியாளர்கள். இதையடுத்து சரவணனை தொடர்பு கொண்ட மீடியாவுக்கு சரியான அதிர்ச்சி. அவர் எங்கோ வெளியூரில் படப்பிடிப்பில் இருந்தார். ‘சார்… நிம்மதியாக ஷுட்டிங் போயிட்டு இருக்கு. நீங்க சொல்ற அந்த துப்பாக்கி ஷுட்டிங்ல எதுக்கு என்னை சம்பந்தப்படுத்துறாங்கன்னு தெரியல’ என்றார்.
உடனடியாக இந்த செய்திக்கு மறுப்பு வெளியிடவும் தயாராகி வருகிறார். அடப்பாவிகளா…? பொழுதுபோவலேன்னா கழுத்துல சுருக்கு போட்டா வௌயாடுவீங்க?
