ஆவி மீது நம்பிக்கை இல்லாத சத்யராஜ் ஆவியா நடிக்கிறாராம்ல?
நீர்தான் ஜாக்சன் துரை என்பவரோ? என்கிற வீரபாண்டியன் கட்டபொம்மன் வசனத்தை பேசி ரசிக்காதவர்களே இருக்க முடியாது. குடும்பத்துல ஒருத்தராவே மாறிவிட்ட ‘ஜாக்சன் துரை’ என்ற பெயரையே படத்தின் தலைப்பாக்கியிருக்கிறார் டைரக்டர் தரணிதரன். இந்த படத்தில்தான் சிபிராஜ் ஹீரோவாகவும் சத்யராஜ் முக்கிய ரோலிலும் நடிக்கிறார்கள். சிபிக்கு ஜோடி பிந்துமாதவி. ‘என்னோட ரொம்ப நாள் ஆசை பிந்துமாதவி கூட நடிக்கறது. அது இந்த படத்துல நிறைவேறிடுச்சு’ என்றார் சிபிராஜ். (என்னவோ நயன்தாரா கூடவே நடிச்ச மாதிரி என்னா ஒரு பீலிங்ஸ்?) உங்களுக்கு பிந்து மாதவியை அவ்வளவு பிடிக்குமா? என்று மடக்கிய பிரஸ்சிடம் மேற்கொண்டு வளர்க்க விரும்பாத சிபி, ‘இல்லைங்க… அவங்க என் அளவுக்கு உயரம். அதான்’ என்றார் சர்வஜாக்கிரதையாக! (நம்பிட்டோம்)
‘நாய்கள் ஜாக்கிரதை பெரிய ஹிட்டான பிறகு தினமும் எங்கிட்ட கதை சொல்ல நிறைய பேர் வருவாங்க. நான் கான்ஷியஸ்சா இருந்தது ரெண்டே விஷயத்துலதான். ஒண்ணு… நானும் அப்பாவும் சேர்ந்து நடிக்கக் கூடாது. இன்னொன்னு நான் நடிக்கிற படம் பேய் படமா இருக்கக் கூடாது. ஏன்னா வாரத்துக்கு பதிமூணு பேய் படம் வருது. இதுல நம்ம என்னத்தை தனியா சொல்லி தனியா ஹிட் பண்ணி? அவ்வளவு உறுதியா இருந்தும் இந்த படத்துல ரெண்டும் நடந்துருச்சு. அப்படியொரு மிரட்டலான முற்றிலும் வித்தியாசமான கதையை சொல்லி அசத்திட்டார் தரணிதரன். அதனால் ஒத்துக்கிட்டேன். அப்பா சத்யராஜே ஆவியா நடிக்கிறார்.’ என்றார் சிபிராஜ். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறாராம். ‘அதற்கு மேல் எதையும் சொல்வதாக இல்லை. மீதி வெள்ளித்திரையில்’ என்றார் அவர்.
பேய் பிசாசு ஆவி இட்லி உப்புமா மீதெல்லாம் நம்பிக்கை இல்லாதவர் சத்யராஜ். அவரையே பேயாக நடிக்க வைக்க வேண்டுமென்றால் ஒரு சாமர்த்தியம் வேண்டுமாச்சே? டைரக்டர் தரணிதரனிடம் கேட்டால், ‘முதல்ல நடிக்க முடியாதுன்னுதான் சொன்னார். நான் கதையை கேளுங்க. பிடிச்சுருந்தா நடிங்கன்னு சொன்னேன். கதையை கேட்ட பிறகுதான் சம்மதிச்சாரு’ என்றார் அவர்.
எல்லாரும் கொடுக்கிற பில்டப்பை பார்த்தா, ஆவிக்கே ஜலதோஷம் பிடிக்கும் போலிருக்கே?