சித்தார்த் சீண்டியது யாரை? ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பு

“அட … நானே என்னைய சொல்லிக்கிட்டேங்க” என்று சொல்கிற வரைக்கும் விடமாட்டார்கள் போலிருக்கிறது. இன்று சித்தார்த் போட்ட ஒரு ட்விட்டர் மெசேஜால் பற்றிக் கொண்டு எரிகிறது வலைதளம். வேறொன்றுமில்லை. “நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் இருக்கிற ஒரு தெருநாய்க்குக் கிடைக்கணுமுன்னு எழுதி இருந்தால் அதை யாராலும் மாத்த முடியாது..” இதுதான் சித்தார்த்தின் ட்விட்.
கருத்தில் பிழையில்லை. ஆனால் போட்ட நேரம்தான் பொல்லாத நேரமாகிவிட்டது அவருக்கு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய அரசு பத்மவிபூஷன் விருது அளித்து கவுரவித்துள்ளது. இந்த நேரத்தில் இவர் இப்படியொரு ட்விட் போட்டால் ரசிகர்கள் சும்மாயிருப்பார்களா? அவர் தங்கள் தலைவரை பற்றிதான் அப்படி எழுதியிருப்பதாக கருதி மென்னியை பிடித்துத் திருகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் ரஜினியை சொல்லலேப்பா… சம்பந்தமில்லாமல் ஏன் ஆஜராவுறீங்க என்று அவரது ரசிகர்கள் சிலரே பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கிடையில் சித்தார்த் திட்டியது தனுஷைதான் என்று வேறு சில கருத்துக்களும் பரவி வருகின்றன.
‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் ஹு காட் டிராப்டு இன் தி கியா கப்போர்டு’ (The Extraordinary Journey Of the Fakir Who Got Trapped In The Ikea Cupboard) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்த வயிற்றெரிச்சல் தாங்க முடியாமல்தான் அவர் இப்படி குறிப்பிட்டிருப்பதாக கூறுகிறார்கள் திரையுலகத்தில். எதுவாக இருந்தாலும், இப்படியொரு விமர்சனத்தை வெளியிட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லைதான்.
மழை வெள்ளத்தில் எடுத்த நல்லப்பெயரை இப்படியா கெடுத்துக் கொள்ள வேண்டும் சித்து?

