அஜீத் விஜய்க்கு ஒரு அவசர போன்! சிம்புவுக்கு அவர்களின் ரிப்ளை என்ன?
‘நாங்க ரெண்டு பேரும் ஒண்ணுதான். ரசிகர்கள் அநாவசியமா சண்டை போட்டுக்க வேணாம்’ என்று கத்தி நறுக்கினார் போல சொல்லியிருந்தால் கூட, தலைவரே சொல்லிட்டாரு. கேட்போம்னு அமைதியாகி விடுவார்கள். ஆனால் அஜீத்தோ, விஜய்யோ அப்படியொரு அழுத்தம் திருத்தமான கட்டளையை தன் ரசிகர்களுக்கு போடாமலிருப்பதால், யார் பர்த் டே வந்தாலும் பேண்ட்டுக்குள் எலி புகுந்த மாதிரி ஆகிவிடுகிறார்கள் ரசிகர்கள்.
நா கூசுகிற அளவுக்கு நாலாந்தர வார்த்தைகளை கையாள்வதும், பெண்கள் கூசுகிற அளவுக்கு திட்டி தீர்ப்பதுமாக இருக்கிறது அஜீத் விஜய் ரசிகர்களின் தனித்தனி செயல்பாடுகள். கமென்ட்டுகள் எல்லாம். கடந்த 22 ந் தேதி விஜய் பர்த் டே. விடுவார்களா? கம்ப்யூட்டருக்கே காய்ச்சல் வர்ற அளவுக்கு கஷாயம் காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்கள் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும். இவற்றையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த சிம்பு, ‘யாரும் சண்டை போடாதீங்க… யாரும் சண்டை போடாதீங்க…’ என்று கேட்டு கேட்டு பார்த்தார். ஒருவரும் அடங்குகிற மாதிரி தெரியவில்லை. உடனே அஜீத்திற்கும் விஜய்க்கும் தனித்தனியாக போன் அடித்துவிட்டார்.
சிம்புவிடமிருந்து போன் என்றதும் இருவருமே ஆர்வமாக பேச துவங்க, ‘அண்ணே… நீங்களே தலையிட்டால்தான் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும். தயவு செய்து அவங்கவங்க ரசிகர்களை அடக்கி வைங்க. புண்ணியமாப் போவும்’ என்றாராம். ‘நிச்சயம் இதுக்கு ஒரு முடிவு கட்டலாம். ரசிகர்களுக்கு புரியுற மாதிரி நாங்க எடுத்துச் சொல்றோம். அதுக்கும் மேல எங்க நட்பை காட்டுற மாதிரி கூட ஏதாவது செய்யுறோம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ என்றார்களாம் சிம்புவிடம்.
அவரிடம் சொன்ன மாதிரியே விரைவில் அஜீத் விஜயிடமிருந்து ஒரு நல்ல தகவலோ, நல்ல புகைப்படமோ வரக்கூடும். அப்படி வந்து ரசிகர்கள் சமாதானமானால், அந்த புண்ணியமெல்லாம் நம்ம சிம்புவுக்கே போய் சேரட்டும்…