கபாலியில் சிவகார்த்தியேன்? இழுபறிக்குள்ளான பா.ரஞ்சித்தின் முயற்சி!
துணி உலர்த்தும் கொடியில் கூட, ரஜினியின் கட்சிக் கொடி பறக்கப் போவதில்லை என்று தெரிந்தும் அவர் மீது கொள்ளை பிரியம் வைத்திருக்கிறது கோடானு கோடி ரசிகர் கூட்டம்! உடல் மண்ணுக்கு, உயிர் ரஜினிக்கு என்கிற அளவுக்கு வெறி கொண்டு திரியும் அந்த கூட்டத்திற்கு ரஜினி அடுக்கடுக்காக அளித்து வரும் படம் ஒன்றுதான் திருவிழா சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரஜினியின் அடுத்தப்படம் கபாலி. பா.ரஞ்சித் -ரஜினி காம்பினேஷனே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைக்க, படம் ரீலீஸ் ஆகும் அந்த நாளுக்காக மொத்த தமிழுலகமும் ரெடி. இந்த நேரத்தில்தான் இந்த ஜிகுஜிகு தகவல்.
கபாலி படத்தில் இரண்டு வேடங்களில் ரஜினி நடிக்கிறார் என்பதெல்லாம் பழைய செய்தி. அதில் ஒரு கேரக்டர் ‘டாண்’ என்பதும் பழைய செய்திதான். ஆனால் இந்த கேரக்டருக்கு தன் குரலில் டப்பிங் பேசி முடித்துவிட்ட ரஜினிக்கு, அவரது இளம் வயது கேரக்டருக்கு வேறொரு இளைஞர் தன் வாய்சில் டப்பிங் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியதாம். பா.ரஞ்சித்துக்கும் அதுவே சரியென பட, ரஜினி குரலை பொறுத்தமாக பேசி அசர வைக்கிற ஆள் ஒருவர் தேவைப்பட்டார். அந்த நேரத்தில்தான் சிவகார்த்திகேயனினி மிமிக்ரி குரல் அதற்கு பொருத்தமாக இருக்கும் என்று நம்பினாராம் ரஞ்சித். இதற்கு முன் பல மேடைகளில் ரஜினியின் குரலை அப்படியே பேசி கைதட்டல் வாங்கியிருக்கிறார் அவரும். அதெல்லாம் ஒரு மிமிக்ரி காலமல்லவா? ஆனால் இப்போது சிவகார்த்திகேயன் இருக்கிற அந்தஸ்துக்கும் உயரத்திற்கும் அவரை அழைத்தால் சரிப்படுமா? ஆயிரம் யோசனைகளுடன் அவரை அணுகினாராம் பா.ரஞ்சித்.
எவ்வித மறுப்பும் சொல்லாமல் திறந்த மனதுடன் ஒப்புக் கொண்டாராம் சிவகார்த்திகேயன். அதிர்ஷ்டக்கட்டையான சிவகார்த்திகேயனுக்கு இந்த விஷயத்தில் மட்டும் அதிர்ஷ்டம் ‘கட்டை’யாகிவிட்டது. வேறொன்மில்லை… இவரது குரல் ரஜினிக்கும் ரஞ்சித்துக்கும் திருப்தி ஏற்படுத்தவில்லையாம். தேடல் வேட்டை தொடர்கிறது. யாருக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்க்கப் போகிறதோ?