பி.சி.ஸ்ரீராம் இருக்காக… அனிருத் இருக்காக… ரசூல் பூக்குட்டி இருக்காக….
சாண் ஏறுனா, அதே சூட்டில் முழமும் ஏறுகிற வித்தை சிவகார்த்திகேயனுக்கு கை வந்த கலையாகியிருக்கிறது. இஞ்க் பை இஞ்ச்சாக உயர்வது ஒரு வகை என்றால், இரண்டாயிரம் அடி இரண்டாயிரம் அடியாக தாண்டுவது இன்னொரு வகை. மிக சரியான லாவகத்தோடு தாண்டிக் கொண்டிருக்கிறார் அவர். தனது நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கும் படம், சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமையும். அதெப்படியய்யா அவ்வளவு உறுதியா சொல்ல முடியுது?
படத்தில் வொர்க் பண்ணும் டெக்னீஷியன்கள் அப்படி! ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம், இசை அனிருத், அரங்க அமைப்பு டி. முத்துராஜ், பட தொகுப்பு ரூபன், ஒலி வடிவமைப்பாளர் ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல் பூக்குட்டி, சண்டை இயக்கம் அனல் அரசு, சிறப்பு ஒப்பனையாளராக WETA நிறுவனத்தை சார்ந்த ஷான் ஃபுட் என்று ராஜா தேர்ந்தெடுத்திருக்கும் அத்தனை பேரும், இன்டஸ்ட்ரியில் மிகமிக முக்கியமானவர்கள்.
இன்று மிகவும் சிம்பிளாக துவங்கப்பட்டது இந்த படத்தின் துவக்க விழா! தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா என்ன சொல்கிறார்?
சிவகார்த்திகேயன் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும்.தொழில் நுட்பகலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும் , நகைசுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை. என்னுடைய நிறுவனமான 24AM STUDIOS தரமான படங்களையும் , உன்னதமான தொழில் நுட்ப கலைஞர்களையும் ஆதரித்து ஊக்குவிக்கும்’ என்றார் உற்சாகமாக!
அப்படியே இன்னொரு செய்தி. வருடத்திற்கு இரண்டு படங்கள் மட்டுமே நடிப்பதாக இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். அப்படி இருந்தால்தான் நிறைய கதைகள் கேட்க முடியும். அதில் பார்த்து பார்த்து நடிக்க முடியும் என்கிறார். நல்ல பாலிஸிதான்!