படம் எடுக்க வந்த சாமியார்… உலகம் உருப்பட தீர்வும் சொல்கிறார்!
உலக நாடுகள் அத்தனையும் தொலைந்து போன மலேசிய விமானம் கடலில் மூழ்கிவிட்டதாகக் கருதி நீருக்கடியில் தேடிக் கொண்டிருக்க, ஆன்மீகவாதி ஒருவர் அந்த விமானம் சூரியனில் இருந்து எப்போதாவது வரும் ஒருவித ஆபத்தான சிவப்பு கதிர்களின் பாதையில் சிக்கி சிக்கி சுக்கு நூறாகி விட்டது என்று கூறியிருக்கிறார். இந்த ஆன்மீகவாதி ஒரு சினிமா இயக்குனர் என்பதுதான் கூடுதல் அதிர்ச்சி. ‘இது என்ன மாற்றம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார் சத்திய நாராயணன். மலேசியா விமானம் பற்றி அவர் கூறி வரும் தகவலை யாரும் சீரியசாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. ஆனால் சீரியஸாக அவர் எடுத்திருக்கும் இந்த திரைப்படத்தை கருத்தில் கொள்ளாமலிருக்க முடியாதே?
சாமியார்கள், ஆன்மீகவாதிகள் என்றாலே, சற்று ஓரக்கண்ணால் பார்த்து ‘ம்க்கூம்’ என்கிற அளவுக்குதான் இருக்கிறது நாட்டு நடப்பு. இந்த நேரத்தில் இவரே ஒரு படத்தை இயக்க வந்திருக்கிறார் என்றால், அது விமர்சனத்திற்குள்ளாகாமல் இருக்குமா? அது பற்றியெல்லாம் கவலைப்படுகிற அளவுக்கு இல்லை அவர்.
உலகத்தில் தீமைகளும் கெட்ட விஷயங்களும் அதிகரித்திருப்பதற்கு காரணம், இது கலி காலம் என்பது மட்டுமல்ல. பிரபஞ்ச சக்தியின் துண்டுதல்தான் காரணம். இப்படி பிரபஞ்ச சக்தியே உருமாறிப் போனதற்கே மனிதனின் தீய சிந்தனையும் நேர்மை குறைபாடும்தான் காரணம் என்று கூறும் சத்திய நாராயணன், தனது படத்தில் அதற்கான தீர்வைதான் சொல்லியிருக்கிறாராம். இப்போது நினைத்தால் கூட மனிதன் தன் எண்ணங்களை நேர்மறையாக செலுத்தினால், உலகம் உருப்படும் என்கிற சத்திய நாராயணா இந்த படத்தை எப்படி எடுத்திருப்பார்?
இந்தப் படத்தில் காதல் இல்லை . கதாநாயகி கதாபாத்திரம் மண்ணுக்கு வரும் தேவதை . கதாநாயகனோ நண்பர்களால் ஏமாற்றப்பட்டு துரோகத்தால் கொலை செய்யப்படும் நிலைக்கு ஆளாகிறான். இப்படி சாவதற்கு என்னை ஏன் இறைவன் படைத்தான் என்று எண்ணும்போது ஒரு மாற்றம் நடக்கிறது. படத்தில் உலக ஆன்மீக மாநாடு , உலக பொருளாதார மாநாடு , உலக மருத்துவ மாநாடு ஆகியவை முக்கிய விஷயங்கள். உலக அரசியல் பற்றியும் இந்தப் படம் பேசுகிறதாம்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஜேம்ஸ் தேனி பக்கமாக ஏராளமான நில புலன்களை வாங்கி வைத்திருக்கிறாராம். அவற்றையெல்லாம் பராமரிக்கும் பொறுப்பாளராக இருக்கிறார் இந்த சத்திய நாராயணன். நான் நினைத்தது எல்லாமே நடந்து வருகிறது. ஆனால் படம் இயக்க வேண்டும் என்று நினைத்தேன். அது மட்டும் நடக்கவில்லையே என்று நினைக்கும் போதுதான் என் முதலாளி நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்தார். என் முதல் படமும் இதுதான். கடைசி படமும் இதுதான் என்ற சத்திய நாராயணனையே ஒரு சினிமா போல ரசிக்கலாம் போலிருக்கிறது.
ஏனென்றால் பேச்சு அப்படி!