கதவடைத்த சூர்யா? கடைசியா சிம்புதான்! செல்லுபடியாகுமா பாலாவின் எண்ணம்?

கட்ட கடைசியில் குருவி இழுக்கிற குதிரை வண்டி ஆகிடுவாரு போலிருக்கு பாலா! எங்கு போனாலும் கதவடைப்புதான் பதில் என்றால், ஐயோ பாவம்… அவரும்தான் என்ன செய்வார்? நல்லா சொல்றாங்கப்பா டீட்ரெய்லு என்று இந்த பாராவின் கடைசியில் நீங்கள் புலம்பினாலும் விஷயம் இதுதான் மக்கஷே….

குற்றப்பரம்பரை படத்தில் விக்ரம், ஆர்யா, விஷால், அவர் இவர் என்று எவர் எவரையோ கணக்குப் போட்ட பாலாவுக்கு, ஒரு கணக்கிலும் விடை வரவில்லை. இவர் கால்ஷீட் தருகிற நேரத்தில் அவர் பிஸி. அவர் கால்ஷீட் தருகிற நேரத்தில் இவர் பிஸி. இவருக்கும் அவருக்கும் ஒத்துப்போகல. அவருக்கும் இவருக்கும் ஒத்துப்போகல… என்று ஒரேயடியாக தடுப்பணை கட்டிவிட்டார்கள் பாடத்திற்கு. இப்போது மீண்டும் தனி ஹீரோ. தாங்க முடியாத துன்பத்தில் தள்ளும் கதை என்று கிளம்பிவிட்டார் பாலா. பெருத்த நம்பிக்கையோடு சூர்யா வீட்டின் கதவை தட்ட, கும்பகோணம் டிகிரி காபி மட்டும்தான் லாபம் என்று முடிந்ததாம் பேச்சு வார்த்தை.

இப்ப இருக்கிற நிலைமையில் வருஷக்கணக்குல ஒரு படத்தில் போய் முடங்க முடியாது என்ற மறுத்துவிட்ட சூர்யாவிடம், அறுபது நாள் போதும் என்றாராம் பாலா. அந்த அறுபது நாளையும் தேதி வாரியாக குறிப்பிட்டு எழுதிக் கொடுத்ததெல்லாம் பாலா வரலாற்றிலேயே இல்லாத விஷயம். அதையும் செய்தாராம் அவர். அப்படியிருந்தும், முழு ஸ்கிரிப்டையும் ஷுட்டிங் போவதற்கு முன் தருவதாக வாக்குறுதி அளித்தும், அந்த படத்தில் நடிக்க முடியாதென கையை விரித்துவிட்டார் சூர்யா என்று தகவல் பரப்புகிறது கோடம்பாக்கம். ஏன்?

படத்தை தன் நிறுவனமான 2டி பேனரில் தயாரிக்க வேண்டும் என சூர்யா கூற, அதற்கு சம்மதிக்கவில்லையாம் பாலா. வேறு வழியில்லாமல் கடையை மூடிவிட்டார்கள். இப்போதைய நிலவரப்படி, விக்ரம், விஷால், ஆர்யா, அதர்வா என்று ஒருவரும் பாலாவை நம்ப தயாராக இல்லாததால், ஒரே வழி சிம்புதான் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் பாலா.

அவரிடம் போனால், யாருக்கு யார் பாடம் சொல்லி கொடுப்பார்களோ என்கிற அபாயம் இருப்பதால், படத்திற்கு பணம் கொடுத்து உதவுவதாக சொன்ன பைனான்சியர்கள் இப்பவே பேய் முழி முழிக்கிறார்களாம்.

வெளுத்ததெல்லாம் பால் அல்ல. வெளுக்கிறவரெல்லாம் பாலாவும் அல்ல! (பழமொழி சொன்னா கேட்டுக்கணும், ஆராய ப்டாது!)

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவாஜின்னு சொன்னதும் அதிர்ச்சி ஆகிட்டாராம் பேரன்!

கோடம்பாக்கத்திலிருந்து அஞ்சு கிலோ மீட்டர் தொலைவில்தான் இருக்கு அன்னை இல்லம்! ஆனால் பல ஹீரோக்களின் நடிப்பு திறமைக்கும் அன்னை இல்லத்திற்கும் இருக்கிற தொலைவு.... அறுநூறு கிலோ மீட்டரோ,...

Close