தம்பி கார்த்தி படம்… டென்ஷனோடு பார்த்த சூர்யா! ரிசல்ட் என்னவாம்?
‘அஞ்சான்’ தந்த உள் காயத்திற்கு ‘மெட்ராஸ்’ மருந்து போட்டிருக்கிறது! இப்படிதான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது இந்த சம்பவத்தை. முதல் மூன்று நாள் கலெக்ஷனே முப்பது கோடி, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் அத்தனை பேரும் எஸ்கேப் போன்ற நல்ல செய்திகளை ‘அஞ்சான்’ தயாரிப்பு தரப்பிலிருந்து கசிய விட்டுக் கொண்டிருந்தாலும், சமூக வலை தளங்கள் அத்தனையும் அஞ்சானின் கொலை தளங்களாக மாறி கொத்து பரோட்டா போட்ட விஷயத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார் சூர்யா.
இந்த வருத்தமான நேரத்தில்தான் சூர்யாவுக்காக ஸ்பெஷலாக திரையிடப்பட்டிருக்கிறது ‘மெட்ராஸ்’ திரைப்படம். கார்த்தி நடிப்பில் ‘அட்டகத்தி’ ரஞ்சித் இயக்கியிருக்கும் படம் மெட்ராஸ். வடசென்னை மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதைதான் இதுவும். ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற நிர்பந்தத்திலிருக்கும் கார்த்தி, ஒரு ஒப்பீனியனுக்காகவும் இந்த ஷோவை அண்ணனுக்கு போட்டு காண்பித்திருக்கிறார்.
சூர்யா சொல்லும் கருத்துக்களையும் திருத்தங்களையும் அப்படியே ஏற்று செயல்பட்டு விடுவது என்கிற மூடில் இயக்குனரும் காத்திருக்க, அவ்வளவு சுவாரஸ்யமாக படத்தை என்ஜாய் செய்தாராம் அவர். ‘ரொம்ப திருப்தியா இருக்கு. தைரியமா ரிலீஸ் பண்ணுங்க ’ என்று கூறிய சூர்யா, ஒரு நல்ல முகூர்த்த நாளையும் குறித்துக் கொடுத்திருக்கிறார் ரிலீசுக்கு. அந்த நாள் அக்டோபர் 2. காந்தி ஜெயந்தி தினம்.
படத்துல டாஸ்மாக் இருக்குங்களா?