தாரை தப்பட்டை ஒலிக்குமா? கடும் திகிலில் சசிகுமார்!
இயக்குனர் பாலாவின் புதிய படம் ‘தாரை தப்பட்டை’! சசிகுமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கவிருக்கிறார். எப்பவோ துவங்கியிருக்க வேண்டிய இப்படத்தின் ஷுட்டிங் இன்னும் அதற்கான அறிகுறியே தெரியாமல் வெயிட்டிங்கில் இருக்கிறது. இதில்தான் சசிகுமார் அப்செட்! பாலா படம்னு தெரிஞ்சுதானே போனாரு? அப்புறம் எதுக்கு அப்செட்?
பொதுவாக பாலா படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும் ஹீரோக்கள், அடுத்த படம் எதையும் கையில் வைத்திருக்கக் கூடாது என்பதுதான் முதல் கண்டிஷனே. படம் எப்போது துவங்கும்? எப்போது முடியும்? என்பது பாலாவுக்கே கூட தெரியாது. இதற்கு முன்பு ‘நான் கடவுள்’ படத்தில் நடித்த ஆர்யா, அந்த படத்திற்காக எத்தனை வருடங்கள் தாடி மீசையோடு திரிந்தார் என்பதை வரலாறு அறியும். படப்பிடிப்பு முடிந்து பேட்ச் வொர்க்கும் முடிந்து பாலா, ‘தாடியை எடுத்துரலாம் தம்பீ ’ என்று சொன்ன பிறகுதான் அதை எடுத்தார் அவர். அதுவும் எப்படி? தன் திரையுலக நண்பர் நண்பிகளை கொத்தாக வரவழைத்து பிரியாணி விருந்தெல்லாம் கொடுத்து! இப்படி கருவாடா காய்ஞ்சாலும், திருவோடா தேய்ஞ்சாலும், ஃஆப்டர் த ரிலீஸ் சம்பந்தப்பட்ட ஹீரோக்களின் எதிர்காலம் முழுக்க எவர் கிரீன் சந்தோஷம்தான்.
இது புரியாதவல்ல சசிகுமார். மார்க்கெட்டில் சுமார் எழு கோடி சம்பளம் வாங்குகிற அவர், பாலா நடிக்க அழைத்தபோதே,‘ அண்ணே… என்னால ரெண்டு மூணு வருஷமெல்லாம் வெயிட் பண்ண முடியாதுண்ணே. சீக்கிரம் முடிச்சு அனுப்பிருங்க’ என்று கேட்டுக் கொண்டுதான் தலையையே விட்டாராம். இப்போதே எதுவும் நடக்காமல் சுமார் நான்கு மாதங்கள் கிராஸ் ஆகிவிட்டது. நடுவில் ஜெயமோகன் எழுதிய வசனங்களை இரண்டு மூன்று முறை திருப்பி எழுத வைத்துவிட்டாராம் பாலா. எழுத்து ராட்சன் என்று பாராட்டப்படும் ஜெ.மோவும் இன்னும் இன்னும் என்று எழுதிக் கொண்டேயிருக்கிறார். ஆனால் பாலாதான் டிக் மார்க் அடிக்கவில்லை.
வசனம் திருப்தியாக அமைஞ்சாதான் ஷுட்டிங் என்ற முடிவுக்கு பாலா வந்திருக்கிறாராம். ‘அது எப்ப திருப்தியா வந்து… நான் எப்ப நடிக்க ஆரம்பிச்சு… அந்த ஷுட்டிங் எப்ப முடிஞ்சு… ஏழு கோடி ஏழு கோடின்னு வருஷத்துக்கு நாலு ஏழு கோடிய பார்த்துருக்கலாமே?’ என்று தனியாக கதவை சாத்திக் கொண்டு புலம்புவதாக கேள்வி.
தேசிய விருதுகள் பர்மா பசார்ல கிடைக்காதே சசி?