திருமணம் / விமர்சனம்

கையெழுத்தில்லாத காசோலை ஆகிக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. சீப் ஐட்டங்களை இறக்கி சில்லரை தேற்றுவதே முதல் கடமை என்று நினைப்பவர்களால் அதே சினிமா இருட்டறையில் முரட்டுக் குத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஐயோ பாவ சீசன் இது. இங்குதான் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறார்கள் ஒரு சிலர். சேரனும், செழியனும், காக்கா முட்டை மணிகண்டன்களும் இல்லாவிட்டால் நம் சினிமா கருவாட்டுக் கூடைதான். சந்தேகமேயில்லை!

உலகிற்கு ஒரு யோசனை சொல். அதையும் உரக்கச் சொல் என்று களம் இறங்கியிருக்கிறார் சேரன். சற்று கால இடைவெளிதான். அதை இட்டு நிரப்புகிறதா திருமணம்?

காதலிக்கிற ஒரு ஜோடி, பெருத்த முயற்சிக்குப் பின் தன் குடும்பத்தை சம்மதிக்க வைக்கிறது. இரு குடும்பத்தினரும் இணைந்து இந்த திருமணத்தை நடத்த கிளம்புகிறார்கள். பொருளாதார இடைவெளியும், பொசுக்கென தலை தூக்கும் ஈகோவும் அந்த திருமணத்தை கேள்விக்குறியாக்குகிறது. முடிவு என்ன? சிம்ப்பிள் லைன்தான். ஆனால் சிறப்பாக சொல்லியிருக்கிறார் சேரன். (ஆரம்ப அரை மணி நேரம் மட்டும் தண்டனை)

இன்கம்டாக்ஸ் ஆபிசரான சேரன், எந்நேரமும் உம்மென இருப்பதும் சமய சந்தர்ப்பம் கூட பார்க்காமல் தன் ஆபிசர் கடமையை காட்டுவதும் சற்றே புன் முறுவல் பூக்க வைக்கிறது. ஆட்டோகிராப் சேரனுக்கும், தவமாய் தவமிருந்து சேரனுக்கும், இந்தப் படத்தில் வரும் சேரனுக்கும் குறைந்தது ஆறேழு வித்தியாசங்கள் இருந்தாலும், அந்த ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ லுக் போகவேயில்லை. தங்கச்சிகளுக்கான அண்ணன்கள் இப்படிதான் இருக்க வேண்டும்.

வெகு காலம் கழித்து சுகன்யா திரையில். நிறைய காட்சிகளை பகிர்ந்தளித்திருக்கிறார் சேரன். ஒரு ஜமீன் வம்ச அழகு சுகன்யாவிடம் இருந்தாலும், ஜமீன் வம்ச திமிரு அந்த அழகை பின்னுக்கு தள்ளுகிறது. நீலாம்பரி இமேஜ் வந்துவிடக் கூடாது என்பதற்காக தம்பிக்காக எதையும் இழக்கிற பாசக்கார அக்காவாக்கியிருக்கிறார்கள் சுகன்யாவை.

நெடுநெடு வளர்ச்சியுடன் உமாபதி. போக போக பிடிக்க வைக்கிறார். நன்றாக டான்ஸ் ஆட வரும் என்பதற்காகவெல்லாம் கதையின் போக்குக்கு நடுவே வம்படியாக ஒரு டான்ஸ்சை நுழைத்திருப்பது இம்சை. அதுவும் அடுத்தடுத்த குறுகிய இடைவெளிக்குள். இளைஞர்களுக்கு விவசாயத்தின் மீது ஒரு பற்று வர வேண்டும் என்பதற்காகவே உமாபதியை இயற்கை உரம் பற்றியெல்லாம் பேச வைத்திருக்கிறார் சேரன்.

கதாநாயகி காவ்யா சுரேஷ், ஹீரோயினுக்குரிய லட்சண பொருத்தங்களில் மைனஸ் மார்க்குதான் வாங்குகிறார். ஆனால் நடிப்பு ப்ளஸ் மார்க்கை அள்ளுகிறது. கோபிகா, நவ்யா நாயர்களையெல்லாம் கண்ணுக்கு காட்டிய சேரனின் தேர்வு இந்த முறை ஏன் பெயிலாச்சு?

தம்பி ராமய்யாவும், எம்.எஸ். பாஸ்கரும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். கலகலப்புக்காக மட்டுமல்ல, கவன ஈர்ப்புக்கும் உதவுகிறது அவர்களின் பிரமாதமான நடிப்பு.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் எதுவுமே மனசுக்குள் அமரவில்லை. (காதுக்குள் நுழைந்தால்தானே மனசுக்குள் அமர்வதற்கு?) சித்தார்த் விபின் என்பதற்கு பதிலாக தன் பெயரை சித்தார்த் வீண் என்று மாற்றிக் கொள்ளலாம் அவர். சபேஷ் முரளியின் பின்னணி இசையும் பெருத்த ஏமாற்றம்.

இலை கொட்டிப்போன ஆலமரத்தை, தலை எட்டுகிற வரைக்கும் தடவிக் கொடுப்பதுதான் அந்த நிழலை அனுபவித்த மனிதர்களின் நியாயமான கடமை! அதற்காக மட்டுமல்ல, இந்தப்படத்தின் ஆகப்பெரிய கருத்துக்களுக்காகவும் போற்றப்படுகிறார் சேரன்.

திருமணம்- சில வருத்தங்களுடன்….!

ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருமணம் | Thirumanam | படம் எப்படி இருக்கு பாஸ்? | #558 | Valai Pechu

https://www.youtube.com/watch?v=y1yMP8JjEQc

Close