வர்றாருப்பா ரூட்டு தல! ஏய் டண்டனக்காவ்!!
அரசனை நம்பி புருஷனை விட்ட கதையா போயிருச்சு விஜய் மில்டனின் முடிவு. ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்திற்கு முன்பாக, ‘கோலி சோடா’ படத்திற்கு பின்பாக அவர் இயக்கவிருந்த படத்தில் ஹீரோ யார் தெரியுமா? நம்ம டி.ஆர்தான். இவர் போய் அவருக்கு ஒரு கதை சொல்ல, கேட்டவுடனேயே ஆஹா என்றும் கூறிவிட்டார் ராஜேந்தர். அதற்கப்புறம் அதை தன் சொந்த பேனரிலேயே தயாரிக்கவும் ரெடியானார் விஜய் மில்ட்டன். அந்த நேரத்தில்தான் கழுத்தை புடுங்கி கம்பியில் மாட்டினார் விக்ரம். “மில்டன்… எனக்கொரு கதை சொல்லுங்க” என்று விக்ரம் அழைக்க, கூடாரத்தை அந்த பக்கம் ஷிப்ட் பண்ணிவிட்டார் இவர்.
மிச்சசொச்ச கதைகள்தான் உங்களுக்கு தெரியுமே? ஞானாதோயம் மீண்டும் விஜய் மில்டனின் நெற்றிப் பொட்டில் டார்ச் அடித்து, ப்ரோ… திரும்பவம் போய் டிஆரை பாருங்க என்றது. மறுபடியும் தனது பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துவிட்டார் மில்டன். என்னைய விட்டுட்டு விக்ரம் கால்ஷீட் கிடைச்சவுடனேயே ஓடிட்டே. தன்மான சிங்கம் நான். தரமாட்டேன் கால்ஷீட் என்றெல்லாம் வாய் சண்டை போடவில்லை டிஆர்.
அதுக்கென்ன… பண்ணிட்டா போச்சு என்றாராம். முன்பு சொன்ன அதே கதை. முன்பு கொடுத்த அதே நாட்கள். ஆனால், இந்த முறை முன்னாடியே ஒரு அமவுன்ட்டை அட்வான்ஸ் பண்ணிருங்க என்றாராம் டி.ஆர்.
இருந்தாலும் ஷுட்டிங் போற வரைக்கும் இந்த தம்பிய நம்பக் கூடாது என்று முடிவெடுத்த டிஆர், யார் இது பற்றி கேட்டாலும், “ஆமா… வந்து கதை சொல்லியிருக்கார். நடக்குற வரைக்கும் எதுவும் உறுதியில்லை. அதனால் நடக்கும்போது கேளுங்க. சொல்றேன்” என்றே சொல்லி வருகிறார்.
மில்டனை நடுவுல யாரும் கூப்பிடாம இருக்கணும்!