அமலாபாலின் கொழுந்தனுக்கு அடிக்குது லக்கி பிரைஸ்….
நேற்று முதல் நீ யாரோ? இன்று முதல் நீ வேறோ? என்று ஆகிவிட்டார் உதயா! நடிகர் உதயா என்றால் சட்டென்று புரியாதவர்களுக்கு அமலாபாலின் வருங்கால கொழுந்தனார் என்றால் புரிந்துவிடும். யெஸ்… டைரக்டர் விஜய்யின் அண்ணன்தான் இந்த உதயா. தமிழில் ‘திருநெல்வேலி’ படத்தில் அறிமுகமான உதயா அதற்கப்புறம் பத்து படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், சுக்கிரன் வக்கிரமாகதான் நடமாடிக் கொண்டிருக்கிறான் இவரது சினிமா வாழ்வில்.
விஜய் அண்டு விஜய்யின் ‘தலைவா’ படத்தில் முக்கியமான ரோலில் நடித்திருந்தாலும், இவரே கதையெழுதி இயக்குகிற அளவுக்கு தம்பிக்கேற்ற அண்ணன்தான் இந்த உதயா. ‘காரைக்குடி பைனான்ஸ்’ என்கிற அற்புதமான கதையை எழுதி அதை படமாக்கும் முயற்சியிலிருக்கிறார். அது ஒரு புறமிருக்க ‘ஆவி குமார் ’ என்ற படத்தில் ஃபுல் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஆவிகளோடு பேசி தன்னை நாடி வருகிற பேஷன்டுகளை நார்மலாக்கி அனுப்புகிற ஆவி அமுதா என்ற பெண்ணை பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் நிறைய கேள்விப்பட்டிருக்கும். இந்த ‘ஆவி குமார்’ படத்தில் உதயாவும் ஆவி அமுதாவை போல ஒரு கேரக்டரில்தான் நடிக்கிறாராம். ‘ஆவியுலக அற்புதங்கள்’ என்று தனி புத்தகமே எழுதுகிற அளவுக்கு ஆவிகள் குறித்து நிறைய ஆராய்ந்து இப்படத்தில் நடித்திருக்கும் உதயாவுக்கு, இப்படம் வெளிவந்தால் கண்ணம்மா பேட்டை சுடுகாட்டு ஆவிகள் கூட ரசிகர் மன்றம் வைக்கிற அளவுக்கு படம் ஹிட்டாகும் என்கிற பெருத்த நம்பிக்கை இருக்கிறது.
‘இத்தனை நாளும் ஹீரோவாதான் நடிப்பேன்னு இருந்துட்டேன். இனிமே கேரக்டர் ரோல்கள் கிடைச்சாலும் ஒரு கை பார்த்துடலாம்னுதான் இருக்கேன்’ என்கிறார் உதயா. ‘வில்லனா நடிக்க கூப்பிட்டா கூட நான் ரெடி’ என்று கூறிவரும் இவருக்கு இன்னொரு ‘வருங்கால வைப்புத் தொகை’யும் இருக்கிறது. நல்ல கதை அமைஞ்சா நானே உன்னை ஹீரோவா வச்சு படம் இயக்குறேன் என்று கூறியிருக்கிறாராம் டைரக்டர் விஜய்.
கொழுந்தனை உசத்திவிட அமலாபாலுக்கும் ஆசையிருக்காதா என்ன?


கணவருக்கு இளையவரைதான் கொழுந்தனார் என்று சொல்லுவார்கள். மூத்தவரை மூத்தார் என்றுதான் அழைப்பார்கள்.