உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களையுமாம் மன்றம்!
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களையுமாம் மன்றம்! என்னது… ஒண்ணும் புரியலையா? நாளைக்கு வெளியாகப் போகும் படங்களில் விஜய் ரசிகர்களின் உறக்கத்தை கலைக்கப் போகிற படம் எஸ்.ஏ.சி யின் நையப்புடையாகதான் இருக்கும்! இந்த படத்தில் ஆசை ஆசையாக நடிக்க வந்த பா.விஜய்யை பதினாலு ரீலுக்கு படம் எடுத்து, அதில் பத்தை நறுக்கி எறிந்துவிட்டு நாலு ரீலை மட்டும் படம் நெடுக தெளித்துவிட்டிருக்கிறார் செயல் டைரக்டர் விஜய் ஜீவன். அல்லது ஒரிஜனல் டைரக்டரும் இந்த விஜய்யின் அப்பாவுமான ஒளிப்பதிவாளர் ஜீவன். அதற்கப்புறம் ஓவர் கம் டைரக்டரான எஸ்.ஏ.சி. இந்த முக்கூட்டு இயக்குனர்களின் கைவண்ணக் கலவையில் முக்காடு போட்டுக் கொள்கிற அளவுக்கு கவலையாகிக் கிடக்கிறாராம் பா.விஜய்.
‘நம்பி வந்தேன். ஆனால் சந்தோஷமா போவலியே’ என்கிற அளவுக்கு படத்தில் அவரை சின்னதாக்கிவிட்டார்கள். இதற்கிடையில் இந்த படம் ஓடவிருக்கும் தியேட்டர்களில் எஸ்.ஏ.சிக்கு கட்அவுட், பால் அபிஷேகம் என்று கலக்க காத்திருக்கிறார்களாம் விஜய் ரசிகர்கள். நாடெங்கிலும் உள்ள அவரது மன்றங்கள் சார்பாக டிக்கெட்டுகளை வாங்கிச் செல்வதும் தொடர்கிறதாம். சிலர் கவுண்டரில் மொத்தம் மொத்தமாக டிக்கெட்டுகளை வாங்கும்போது செல்பி எடுத்து சென்னைக்கு அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
விஜய் ரசிகர்களின் இந்த பேரார்வம் கண்டு சந்தோஷத்திலிருக்கும் எஸ்.ஏ.சி இதே போலொரு இன்னொரு படத்தில் நடித்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறது கோடம்பாக்கம்!
முக்கிய குறிப்பு- இந்த படத்தை டைரக்டர் ஷங்கருக்கு போட்டுக் காட்டவும் ஏற்பாடுகள் நடக்கிறதாம். வருவாரா?