ஐயோ மோதிரம் போச்சே! இன்னும் பொறக்கவே பொறக்காத குழந்தைகள் கூட விஜய்யால் வருத்தம்?
ஏண்டா டேய்…. உலகத்துல இப்படியெல்லாம் கூட சிந்திப்பீங்களா? என்று விஜய்யின் சுத்தமான சுய சிந்தனையுள்ள ரசிகர்கள் ஒட்டு மொத்தமாக திரண்டு வந்து கல்லெறிந்தால் கூட, தலைகுனிந்து அந்த காயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஏன்னா நிலைமை அப்படி! நிஜமும் அப்படி!
வேறொன்றுமில்லை. விஜய் பிறக்கும் போது அவரை பெரிய்ய்ய அப்போலோ மருத்துவமனையிலோ, விஜயா ஹாஸ்பிடலிலோ சேர்க்க வசதியேயில்லை அவரது அப்பா எஸ்.ஏ.சிக்கு. சாதாரண கவுருமென்டு ஆஸ்பத்திரியில்தான் பிறந்தார் விஜய். காலம் விஜய்க்கு கொடுத்திருக்கிற அந்தஸ்தும், புகழும் கொஞ்ச நஞ்சமல்ல. குறைவில்லாத செல்வமாக கோடி கோடியாக சொத்து வேறு. இந்த நிலையிலும் தனது ஆரம்பகால நிலைமையை நினைத்துப் பார்ப்பது விஜய்யின் பெரிய மனசுக்கு உதாரணம். தனது பிறந்த நாளான ஜுன் 22 ந் தேதி அவர் பிறந்த சென்னை அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் அவர், அன்று பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் தன் கையால் மோதிரம் அணிவிப்பதை கடந்த பல வருடங்களாகவே வழக்கத்தில் வைத்திருக்கிறார்.
இந்த வருடம் அது நடக்கப் போவதில்லை. ஐயய்யோ… ஏன்? அவர்தான் உள்ளூரிலேயே இல்லையே? புலி படப்பிடிப்பின் போதுதான் கோடை விடுமுறை குடும்பத்திற்கும் குழந்தைகளுக்கும். ஆனால் அவருக்கு மட்டும் இல்லை. ‘அதுக்கென்ன கண்ணுகளா… ஷுட்டிங் முடிஞ்சதும் லண்டன் பறக்குறோம்’ என்று கூறியிருந்தாராம். சொன்னபடியே லண்டனுக்கு பறந்துவிட்டார். ஜுலை 1 ந் தேதிதான் சென்னைக்கு வருகிறார். எனவே இந்த பிறந்த நாளுக்கு அவர் அரசு மருத்துவமனைக்கு செல்ல மாட்டார். மோதிரமும் கிடைக்காது.
மீண்டும் ஒரு முறை தலைப்பை படிக்கவும்!