கர்த்தாவே… மோடி என்னைய கூப்பிடாம இருக்கணும்!
மோடியின் பிஜேபி நாடெங்கிலும் அசுர வெற்றி பெற்ற ஐந்தாவது நிமிடத்திலேயே தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தோளில் தங்க ஜரிகை மினுமினுக்க ஆரம்பித்தது. ‘இனிமே இந்தியா முழுக்க நம்ம ஆட்சிரா…’ என்று அவரது ரசிகர்களும் கொண்டாடி வந்தார்கள். அதற்கேற்ப மோடிக்கும், தமிழகத்தில் தாறுமாறான வெற்றி பெற்ற ஜெயலலிதாவுக்கும் விஜய் வாழ்த்துக்கள் தெரிவித்திருப்பதாக அவரது பி.ஆர்.ஓ செல்வகுமார் நாட்டுக்கு அறிவித்தார். இது போதாதா?
மோடியின் பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு ரஜினியும் விஜய்யும் செல்லப் போகிறார்கள். அவர்களுக்கு முதலிடத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் இஷ்டத்திற்கு கதையளக்க ஆரம்பித்தது சமூக வலைதளங்கள். சில இணையதளங்களும் இதை செய்தியாகவே வெளியிட்டன. இந்த நிமிடம் வரைக்கும் இவ்விருவரும் அழைக்கப்பட்டதாக தெரியவில்லை. இதற்காக விஜய் வருந்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கோடம்பாக்கம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில்தான் அந்த திடுக்கிடும் செய்தி.
மோடியின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அவரும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. நேற்று காலை வரை நமக்கு அழைப்பு வரலேயே என்று கூரியர் பாய்க்காக காத்திருந்த விஜய், ராஜபக்சே பிரச்சனை கிளம்பிய பின்பு, சாதாரண சாம்பிராணி பாய் வந்தால் கூட கதவை திறக்கப் போவதில்லை. மோடி கூப்பிட்டு… இவரும் போயிருந்து… அங்கு ராஜபக்சே வந்திருந்து… விஜய்யும் அவரும் ஒருவருக்கொருவர் வணங்குவது போல ஒரு ஸ்டில் வந்தால் போதும்.
சும்மாவே சுண்டுவிரல்ல நிப்பானுங்க. அதற்கப்புறம்…?
நேற்றிலிருந்து விஜய்யின் பிரார்த்தனை இந்த செய்தியின் தலைப்பாகவே இருக்கிறதாம்.