நயன்தாரா விஷயத்தில் விஜய் சேதுபதியின் ஆசை நிறைவேறியது!
சொல்லுகிற வாக்கு பலித்தால் அவருக்கு கரிநாக்கு என்பார்கள். விஜய் சேதுபதிக்கு சரியான (கோழிக்)கறிநாக்கு போல! சொன்னது நடந்து விட்டதே? விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ‘நீங்க யாரையாவது கடத்தணும்னா யாரை கடத்திட்டு போவீங்க?’ என்றொரு கேள்வி. யோசிக்காமல் பதில் சொன்னார் விஜய் சேதுபதி. ‘கண்டிப்பா நயன்தாராவைதான்’ என்று. அதற்கப்புறம் அவரிடம் இது குறித்து கேட்ட மீடியாக்களிடம், ‘சும்மா தோணுச்சு சொன்னேன். அதுக்கு முன் பின் அர்த்தமெல்லாம் கற்பிச்சிராதீங்க’ என்றார்.
ம்ஹும்… இனி யார் தடுத்தாலும், விஜய் சேதுபதிக்கும் நயன்தாராவுக்குமான லவ் டிராக்கை மாற்ற முடியாது. ஏனென்றால் ஒரு படத்தில் இருவரும் ஜோடி சேர்கிறார்கள். இந்த படத்தை இயக்கவிருப்பது போடா போடி படத்தை இயக்கிய விக்னேஷ் சிவன். தனுஷின் சொந்தப்பட நிறுவனமான வொன்டர்பார் நிறுவனம்தான் இந்த படத்தையும் தயாரிக்கப் போகிறது.
இது ஒருபுறம் இருக்க, விஜய் சேதுபதிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு பனிப்போர் பல காலமாகவே நிலவிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், சிவகார்த்திகேயனின் உற்ற நண்பர், வெல் விஷ(ய)ர் தனுஷ் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்கிறார் என்பது,
காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையல்ல என்பது மட்டும் சால சத்தியம்!


