தாஜ்மஹாலுக்கு போகிறார் விஜய்!
தாஜ்மஹாலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி உண்டா? இல்லையா? என்கிற டென்ஷன் எல்லாம் நடிகர்களுக்கு தேவையில்லை. அது தயாரிப்பு நிர்வாகிகளின் டென்ஷன்! அப்படியொரு டென்ஷனை தூக்கி அட்லீ தலையில் வைத்துவிட்டார் விஜய். இவரும் அவரும் இணைகிற புதிய படத்தின் டூயட் அடுத்த வாரத்தில் படமாக்கப்படவிருக்கிறது. ஒரு சில மூவ்மென்ட்ஸ்களை தாஜ்மஹாலிலும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் எடுக்கலாமே என்றாராம் விஜய்.
இந்த இடத்தில் பேரதிர்ச்சிக்கு ஆளானார் அட்லீ. என்னவொரு கோ இன்சிடென்ட்? அன்று இரவுதான் அட்லீயின் ஆசை மனைவி ப்ரியா, ஏங்க… தாஜ்மஹாலை பார்க்கணுங்க என்றாராம் அட்லீயிடம். “ஷுட்டிங் இருக்கேம்மா… வெயிட் பண்ணு. போவலாம்” என்று அப்போதைக்கு கூறி சமாதானப்படுத்தியவருக்கு மறுநாளே விஜய் இப்படியொரு நெய் புட்டு கொடுத்தால் எப்படியிருக்கும்? சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தேவிட்டாராம். இதை கேள்விப்பட்டு ப்ரியாவும் துள்ளிக்குதித்திருப்பார் என்பது உப தகவல்.
உடனே டெல்லி, மஹாராஷ்டிரா பகுதிகளில் இருக்கும் சினிமா சேவையாளர்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளார்கள். ஏற்கனவே பிரதமர் மோடிக்கு அறிமுகமானவர்தான் விஜய். “அரசியல்ல நம்ம செல்வாக்கு அப்படியிருக்கும்போது, தாஜ்மஹால்ல ஸ்பீக்கர் கட்டி அலட்டுவோம்ல?” என்கிறது விஜய்க்கு நெருக்கமான வட்டாரம்.
அதுக்காக தாஜ்மஹால் சுவத்துல விஜய்-சங்கீதான்னோ, அட்லீ-ப்ரியான்னோ கரியால எழுதிட்டு வந்துராதீங்க கண்ணுங்களா?