பிஜேபிக்கு ஆதரவாக ரஜினி பிரச்சாரம்? பெரிசா கிழிக்க நினைக்கும் விஜயகுமார்!
“என்னோட ஒண்ணுவிட்ட சித்தப்பாவோட கன்னுகுட்டிக்கு பொறந்த கடைக்குட்டி எனக்கு நல்ல பழக்கம். எதுவாயிருந்தாலும் முடிச்சுடலாம்” என்று நாக்கு கூசாமல் வாக்கு கொடுக்கிற கூட்டம் சினிமாவிலும் சரி. அரசியலிலும் சரி. வதவதவென இருக்கும். அப்படியொரு வாக்குறுதியை நம்பி மோசம் போய்விட்டதோ பிஜேபி என்று அஞ்ச வைக்கிறது விஜயகுமாரின் ஸ்டேட்மென்ட்.
விஜயகுமாருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் பழக்கம்னா பழக்கம், அப்படியொரு பழக்கம்! படப்பிடிப்பு, பண பரிவர்த்தனை என்பதை தாண்டி குடும்ப ரீதியாக பழகும் நண்பர்கள்தான் இருவரும். அதற்காக விஜயகுமார் சொல்வதையெல்லாம் ரஜினி கேட்டுவிடுவாரா என்றால், அது சத்தியமாக நடக்காது. அதுவும் அரசியல் விஷயத்தில் ரஜினியின் மனசு நினைத்தாலும், மூளை அதை கேட்காது. பின்பற்றவும் செய்யாது.
மோடியே ரஜினியின் வீடு தேடி வந்து வாய்ஸ் கொடுங்க என்று கேட்ட பின்பும், நழுவிய மீனாக துள்ளி ஓடியவர் அவர். “இந்த தேர்தலுக்கு ரஜினியை பிரச்சாரம் செய்வதற்காக கூப்பிடப் போகிறேன்” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் நடிகர் விஜயகுமார். மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பி.ஜே.பி யில் தன்னை இணைத்துக் கொண்ட விஜயகுமார், தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்வேன் என்றும் கூறியிருக்கிறார். நல்ல விஷயம். ஆனால் நான் இந்த பிரச்சாரத்தில் பங்கேற்க ரஜினியையும் அழைப்பேன் என்று அவர் கூறியிருப்பதுதான் வேண்டாத வேலை என்று தோன்றுகிறது.
ஒருவேளை “ரஜினி எனக்கு நல்ல நண்பர். நான் பேசுனா அவர் முடியாதுன்னு சொல்ல மாட்டார்” என்று வெற்று வாக்குறுதி கொடுத்து கட்சியில் சேர்ந்தாரோ என்னவோ?