இரண்டு படங்கள்! ஒரே ரவுடி? சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டாரா விஜய் சேதுபதி?
ஏழாவது மாடியிலிருந்து விழுந்தாலும், பஞ்சு மெத்தையில்தான் விழுந்திருக்கிறார் விஜய் சேதுபதி. பண்ணையாரும் பத்மினியும் படத்திலிருந்தே வி.சே வுக்கு நேரம் விசேஷமாக இல்லை. தொட்டதெல்லாம் தோல்வி. பற்பசை கூட பர்னால் என்றாகிவிட்டது நிலைமை! அந்த நேரத்தில்தான் நானும் ரவுடிதான் வந்து அவரது முந்தைய தோல்விகளை பேட்ச் போட்டு மூடி, அதன் மேல் பிரமாதமான ரோடும் போட்டுக் கொடுத்திருக்கிறது.
ரவுடியில்ல. ஆனா ரவுடி மாதிரி என்ற கேரக்டரில் அப்படியே நடித்து அப்படியொரு பேர் வாங்கியிருந்தார் அவரும். இந்த நேரத்தில்தான் அந்த இன்னொரு செய்தியும் அடிஷனலாக வந்து ஆளை அடிக்கிறது. நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் அல்லவா? அதிலும் இவருக்கு ரவுடி ரோல்தானாம். ஆனால் இவரை ரவுடி என்றே தெரியாமல் காதலிப்பாராம் ஹீரோயின். கடைசியில் நான் ரவுடிதான் என்று அவருக்கு புரிய வைப்பாராம் விஜய் சேதுபதி.
கொரியன் படம் ஒன்றை முறைப்படி ரைட்ஸ் வாங்கி தமிழில் தயாரிக்கப்படும் இந்த கதையும், நானும் ரவுடிதான் கதையும் கிட்டதட்ட ஒன்று போலவே டிராவல் ஆவதால் அந்தப்படம் வெளிவரும்போது வி.சேவுக்கு ஜெராக்ஸ் நாயகன் என்ற சிக்கலான பெயர் வந்தாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள். “இதே போலொரு படத்தில் நடிச்சுகிட்டு இருக்கேன்” என்று அவர் முன்பே சொல்லியிருக்கலாமே என்றும் கேள்விகள் எழலாம்.
எழட்டும்… அதற்கெல்லாம் அஞ்சுகிறவரா விஜய் சேதுபதி?