மகனை தொடர்ந்து மகளையும் சினிமாவுக்குள் நுழைக்கிறார் விஜய் சேதுபதி?
தமிழ்சினிமாவில் தான் சம்பாதித்ததை மீண்டும் சினிமாவிலேயே கொட்டுகிற ஹீரோக்களை அந்த கலைத்தாய் கைவிடுவதேயில்லை. மிக மூத்த நடிகர்களில் ஆரம்பித்து, நேற்று வந்த ஆர்யா, தனுஷ், விஜய்சேதுபதி, ஸ்ரீகாந்த் வரைக்கும் கூட சொந்தப் பணத்தை இறக்கி கையை சுட்டுக் கொண்டவர்களும் உண்டு. பிற்பாடு எடுத்துக் கொள்ளலாம் என்று நம்பிக்கையோடு நடைபோடுகிறவர்களும் உண்டு. தப்பித்து கரையேறியவர்களும் உண்டு.
இதில் விஜய் சேதுபதி இன்னும் ஒரு ஸ்டெப் மேலேறி நிற்கிறார். ஆரஞ்சு மிட்டாய் போல சொந்தப்படம் எடுத்து கையை சுட்டுக் கொண்டாலும், மீண்டும் மீண்டும் சொந்தப்படம் எடுப்பேன் என்று தெனாவெட்டாக கூறி வருவதை பாராட்டியே ஆக வேண்டும். அது மட்டுமல்ல, தனது வாரிசுகளையும் சினிமாவுக்குள் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தாரே… அதற்காகவும் பாராட்ட வேண்டும்.
யெஸ்… தற்போது அவர் நடித்து வரும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் அவரது மகன் சூர்யா விஜய் சேதுபதியின் மகனாக நடிக்கிறார் என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். தற்போது அவரது மகள் ஸ்ரீஜாவுக்கு டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் மெம்பர்ஷிப் கார்டு எடுத்துக் கொடுத்திருக்கிறாராம். விஜய் சேதுபதி மனதில் என்ன நோக்கம் இருக்கிறது என்பது புரியவில்லை. ஆனால் சினிமாவில் தனது பிள்ளைகளையும் இறக்கிவிட்டு, சினிமா என்பது நல்ல தொழில்தான். நல்லவர்களுக்கு அங்கு இடமில்லை என்பதெல்லாம் சும்மா என்பதை நிரூபித்திருக்கிறார்.
அதற்காகவே கைதட்டி வரவேற்போம்… குழந்தைச் செல்வங்களை!