கோவை பக்கம் விஜய்! ஆந்திரா பக்கம் விஷால்! -கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
பூஜையும் கத்தியும் ஒரே நாளில் ரிலீஸ்! கத்தி கலெக்ஷனை கொட்டிக் குவித்துக் கொண்டிருக்க, பூஜையும் நிரம்பிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் கத்தி அளவுக்கு இல்லை என்பது கவலையில்லை. ஏனென்றால் மார்க்கெட்டில் வெள்ளைக் குதிரைக்கு ஒரு ரேட், ப்ரவுன் குதிரைக்கு ஒரு ரேட்! அதன்படிதான் அள்ளுகிறது வசூலும். இருந்தாலும் இந்த மேம்பட்ட நிலையை தங்களுக்கு வாரி வழங்கிய ரசிகர்களை சந்திக்கவில்லை என்றால் எப்படி?
சொல்லி வைத்தாற் போல கிளம்பிவிட்டார்கள் இருவரும். விஜய் கோவை ஏரியாவுக்கு சென்றிருக்கிறார். அவருடன் படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சென்றிருக்கிறார்கள். ஆந்திராவுக்கு போன விஷாலுடன் ஸ்ருதியும் போவார் என்று எதிர்பார்த்தால், முயல் கூண்டை விட்டு வெளியே வரவில்லை. கோவைக்கு போன விஜய், தனது கட் அவுட்டில் பால் ஊற்றுவதற்காக மேலே ஏறி விபத்திற்குள்ளாகி மரணமடைந்த ரசிகரின் வீட்டுக்கு போய் அந்த குடும்பத்திற்கு மூன்று லட்ச ரூபாய் நிதி வழங்கியிருக்கிறார். (தான் சிறைக்கு போனதற்காக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அம்மா வழங்கியதும் அதே மூன்று லட்சம்தான். என்னே ஒரு ஒற்றுமை!)
இந்த பக்கம் விஷாலுக்கு அந்த நெருக்கடிகள் எதுவும் இல்லை. இருந்தாலும் தெலுங்கில் வெளியான பூஜா, ஏகப்பட்ட அப்ளாஸ்களை அள்ளியிருக்கிறதாம். விஷால் போன இடங்களில் எல்லாம் அவரை தொட்டுப்பார்க்க தாவி வந்தார்களாம் ரசிகர்கள். ‘தெலுங்கில் நேரடியாக ஒரு படத்தில் நடிப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார் விஷால்.