விஷால் எங்கே? நீடிக்கும் மர்மம்! சங்கங்கள் மவுனம்!
எப்போது தேர்தலில் வென்று பொறுப்புக்கு வந்தாரோ, அப்போதிலிருந்தே வெங்காயத்தை நம்புறதா, வெந்தயத்தை முழுங்குறதா என்று குழம்புகிற அளவுக்கு விஷாலை கூடி கூடி விரட்டுகிறது குழப்பம். டென்ஷன் ப்ரீயாக இருக்க நினைத்தாலும், யாரும் விட்டால்தானே?
இந்த நிலையில்தான் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்துவிட்டார் என்றும் புதிய தகவல்கள் கிளம்புகின்றன. அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்தால் ‘அப்படியா?’ என்கிறார்கள். ஆனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தனக்கென உருவாக்கியுள்ள வாட்ஸ் ஆப் குரூப்பில், ‘விஷால் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வருகிறதே… உண்மையா?’ என்று கேட்டு வருகிறார்கள் சிலர்.
பல்வலி, தீராத தலை வலி, கண் நரம்பில் பிரச்சனை என்றெல்லாம் அடுக்கடுக்காக வதந்திகள் கிளம்பும் நிலையில், எதற்கும் பதில் சொல்ல மறுக்கிறது விஷால் வட்டாரம். சண்டக்கோழி பார்ட் 2 படத்தின் ஷுட்டிங் மீண்டும் மார்ச் 5 ந் தேதி துவங்கவிருப்பதாகவும், அதில் கலந்து கொண்டு நடிக்க விஷால் உறுதியளித்திருப்பதாக லிங்குசாமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஷால் உடல் நலத்தோடு இருந்திருந்தால், கமல்ஹாசனின் அரசியல் கட்சி துவக்க நாளில் அவர் மேடையில் இருந்திருப்பார் என்று சொல்லப்படும் கருத்துக்களையும் மறுப்பதற்கு இல்லை.
சிகிச்சைக்கு போனீங்களோ, நிம்மதியை தேடிப் போனீங்களோ… சீக்கிரம் சென்னைக்கு வந்து ஏதாவது பிரச்சனையில் மூக்கை நுழைங்க விஷால்.
போரடிக்குது… நாட்ல!