த்ரிஷா, நயன்தாரா, ஹன்சிகா ஆப்சென்ட்! ஆனாலும் வந்து சேர்ந்ததாம் ஓட்டு?
இந்த தேர்தல் விஷாலை பொறுத்தவரை துரோகிகளை அடையாளம் காட்டுகிற தேர்தலாக அமைந்துவிட்டது. ஆரம்பத்தில், மச்சி… நீதாண்டா தமிழ் சினிமாவையே காப்பாத்தணும் என்கிற அளவுக்க அவரை உசுப்பிவிட்ட ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா, உள்ளிட்ட அவரது அத்தனை நண்பர்களும் கடைசி நேரத்தில் விஷாலை கழற்றிவிட்டுவிட்டார்கள்.
நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, தமன்னா, காஜல் அகர்வால், ப்ரியா ஆனந்த், உள்ளிட்ட பல இளம் நடிகைகளும் முற்றிலுமாக தேர்தல் நடைபெறும் இடத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை. இவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா? அங்குதான் ட்விஸ்ட்!
நீங்க யாரும் அங்கு வரவேண்டாம். தபால் ஓட்டு போட்டு அந்த ஸ்லிப்பை எங்க கையில் ஒப்படைச்சுடுங்க என்று கூறிவிட்டாராம் விஷால். இவரது அணி சார்பாக மும்பை, பெங்களூர், ஆந்திரா, கேரளா போன்ற நகரங்களில் வசித்து வரும் அத்தனை நடிகர் நடிகைகளிடமும் ஓட்டுகள் பெறப்பட்டு தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதில் நாம் மேலே குறிப்பிட்ட நடிகைகளின் ஓட்டுகளும் அடக்கம்.
உசுப்பி உசுப்பியே தேர்தலில் விஷாலை இழுத்துவிட்டு வேடிக்கை பார்த்த ஆர்யா, தேர்தல் நெருங்குகிற சில தினங்களுக்கு முன் ஐதராபாத்துக்கு ஓடிவிட்டார். ஜெயம் ரவியும் ஏதோவொரு காரணத்தை காட்டி தமிழ்நாட்டிலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டார். ஜீவா நடித்த இரண்டு படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கிறது. அதற்கப்புறம் வரப்போகிற மூன்றாவது படத்தின் ஷுட்டிங்கை வேண்டுமென்றே இழுத்துப் போட்டுக் கொண்டு நடித்துக் கொண்டிருந்தார். தேர்தலில் ஓட்டு போட வருவதே பெரிய விஷயம் என்கிற அளவுக்கு ஒதுங்கிப் போனார்கள் இவர்கள்.
இதையெல்லாம் நினைத்துப் பொங்கி பொருமிக் கொண்டிருக்கிறாராம் விஷால். நல்லவேளையாக ஓட்டு போடவாவது வந்தார்களே என்கிற அளவுக்கு ஆறுதலாகியிருக்கிறது விஷால் ஏரியா. (போட்டது விஷாலுக்குதானா தோழர்ஸ்…?)
இவர்களோடு ஒப்பிடுகையில், நேரில் வராவிட்டாலும் எங்கோ இருந்து கொண்டு வாக்களித்த நடிகைகள் தேவலாம்!