ஆமா… ஆர்யாவுக்கு அஜீத் மேல என்ன காண்டு? பிரஸ்சே…. அதை கொஞ்சம் தோண்டு!

தேரை இழுத்து தெருவுல விட்ட ஆர்யா இந்த நேரத்தில் எங்கிருக்கிறாரோ தெரியாது. ஆனால் சென்னை கிரீன் பார்க் ஓட்டலில் ஆர்யா இழுத்து விட்ட தேரின் வீலுக்கு தேய தேய பஞ்சர் போட்டுக் கொண்டிருந்தார் விஷால். வேறொன்றுமில்லை… ஆம்பள படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் ஆர்யா பேசியதற்கு இப்போது விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன பேசினார் ஆர்யா? ரிவைண்ட் ப்ளீஸ். “‘என்னடா மச்சான்… பொங்கலுக்கு நிறைய படம் வருதே. ஆம்பளை படத்தை வேற இப்ப போய் ரிலீஸ் பண்றன்னு சொல்ற?’ இப்படி நான் விஷாலிடம் கேட்டப்போ, எவனாயிருந்தாலும் உதைப்பேன்னு சொன்னார்”. இதுதான் ஆர்யாவின் பேச்சு.

அந்த நேரத்தில் அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ படமும் திரைக்கு வருவதாக இருந்தது. அதற்கப்புறம்தானே தள்ளிப்போனது. விஷால் அஜீத்தைதான் அவ்வாறு சொன்னதாக கருதிவிட்டார்கள் அவரது ரசிகர்கள். சும்மாவே சும்மாடு கட்டுவார்கள். ஆர்யாவே இப்படி சொல்லிவிட்டாரா? அவ்வளவுதான்… எலிப்பொறியில் மசால் வடைக்கு பதிலாக விஷாலின் இமேஜை செருகி, அதில் அவரையே போட்டு நசுக்கியும் தள்ளினார்கள். திரும்பிய இடத்திலெல்லாம் திட்டு. கழுவி கழுவி ஊற்றினார்கள். நல்லவேளை… விஷால் பேஸ்புக் ட்விட்டர் பக்கம் வரவில்லை. வராவிட்டாலும் தகவல் போகுமில்லையா?

இன்று ‘ஆம்பள’ படத்தின் சக்சஸ் மீட்டில் இதற்கு கனத்த விளக்கம் கொடுத்தார் விஷால். ‘இனிமே என் படங்களுக்கு ஆடியோ ரிலீஸ் பங்ஷனே இருக்காதுங்க. இருந்தாலும் நண்பர்களை கூப்பிட மாட்டேன். இப்படிதான் ‘நான் சிவப்பு மனிதன்’ ஆடியோ விழாவுல எனக்கும் லட்சுமிமேனனுக்கும் லவ்வுன்னு கொளுத்திப் போட்டுட்டான் விஷ்ணு. அந்த பிரச்சனையை சமாளிக்கறதுக்குள்ள ஒருவழியாயிட்டேன். இப்ப ஆம்பள பங்ஷன்ல ஆர்யா இப்படி பேசிட்டான். நான் சத்தியமா அப்படி சொல்லவேயில்லைங்க. அது முழுக்க முழுக்க அவனோட கற்பனை’ என்றார் விஷால்.

ஆமா… ஆர்யாவுக்கு அஜீத் மேல என்ன காண்டு? பிரஸ்சே…. அதை கொஞ்சம் தோண்டு!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இது ஆஞ்சநேயர் சக்திடா! படப்பிடிப்பில் அரண்ட இயக்குனர்

திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு மேலே போன ராக்கெட் ரெண்டு நிமிஷம் நின்னு போச்சாம் தெரியும்ல? சனீஸ்வரன் பவர் அவ்வளவுடா... என்று வாட்ஸ் அப்பிலும், முக நூலிலும் பீதி...

Close