சுற்றுசூழல் கெட்டுப்போவுது… லிங்காவை கிளம்ப சொன்ன கிராமம்!
ரஜினி சந்திர மண்டலத்திற்கு போனாலும், அங்கே ஒரு கூட்டம் கூடி ஆட்டோகிராப் கேட்டாலும் ஆச்சர்யமில்லை. அவருக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருப்பதை போல, ஆந்திராவின் குக்கிராமம் ஒன்றிலும் ரசிகர்கள் இருந்திருப்பார்கள். ஆனால்? ஊர் கட்டுப்பாடு, ஊர் நன்மை, பொல்யூஷன் கன்ட்ரோல் எல்லாவற்றையும் மனதில் வைத்துக் கொண்டுதான் அந்த ரசிக உள்ளங்களும் அமைதி காத்திருக்கும். ஏனென்றால் எல்லாவற்றையும் விட குடிக்கிற தண்ணீரும், சுவாசிக்கிற காற்றும் ஒசத்திதானே?
லிங்கா படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற்றதை யாவரும் அறிவர். அதற்கப்புறம் அங்கு எழுந்த எதிர்ப்புகளை மீறி, பல நாட்கள் தாக்கு பிடித்தது லிங்கா படக்குழு. ஒரு புறம் எதிர்ப்புகள் இருந்தாலும், ரஜினியை நேரில் காண லாரி கட்டிக் கொண்டு வருகிற ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியதே தவிர குறைந்தபாடில்லை. அதற்கப்புறம் தமிழ்நாட்டு வில்லேஜ் போல ஒரு வில்லேஜ் தேடிய படப்பிடிப்புக் குழு, ஆந்திராவுக்கு இடம் பெயர்ந்தது. அங்கு மிகப்பெரிய அரண்மனை செட் ஒன்று போட்டார்களாம். அதில்தான் வந்தது வினை.
இந்த செட்டிற்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்ட்டர் ஆஃப் பாரிஸ், மற்றும் செட் உபயோக பொருட்கள், பெயின்ட்டுகள் எல்லாவற்றையும் அருகிலிருக்கும் முக்கிய நீர் நிலையான ஏரியில் கழுவியிருக்கிறார்கள். இதில் ஏரி நீர் மாசுப்பட்டதுடன் மீன்களும் செத்து மிதக்க ஆரம்பித்தனவாம். ஊருக்கே பொதுவான குடிநீர் மண்டலமும் அதுதான் என்கிறார்கள். இதனால் லிங்கா படப்பிடிப்பு குழுவினரை நீங்க உடனே கிளம்புங்க என்று கூறிவிட்டார்களாம். இது தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தார்களாம். பிரமாண்ட செட் போட்டிருக்கிறோம். நினைத்தவுடன் பிரித்தெடுத்துக் கொண்டு கிளம்ப முடியாது. அப்படி கிளம்பினால் இதே செட்டை இன்னொரு ஏரியாவில் போட வேண்டி வரும். அதற்கும் பல கோடிகள் இழப்பு ஏற்படும் என்று விளக்கம் அளித்திருக்கிறதாம் லிங்கா குழு.
ஆச்சர்யம் என்னவென்றால், இவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்த மாதிரி, படத்தில் கலெக்டராக நடிக்கும் ரஜினியிடம் மக்கள் மனு கொடுப்பதை போல காட்சி இருக்கிறதாம். நல்ல ஒற்றுமை.