ஹீரோயினை ஏன் குள்ளமா தேடுனாங்களாம்…? அணைக்க வாட்டமா இருக்கட்டுமேன்னுதான்!
கெட்டவன், தீயவன், அரக்கன், கிறுக்கன் என்று கத்தியை கூர் தீட்டிக் கொண்டே தலைப்பை யோசிக்கும் இளம் இயக்குனர் வட்டாரத்தில் மேலும் ஒரு தீயவர்… ஸாரி, மேலும் ஒரு இயக்குனர்! ‘யானும் தீயவன்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பிரசாந்துதான் அவர்! இப்படியொரு தலைப்பை வச்சுருக்கீங்களே? என்றொரு கேள்வியோடு அவரிடம் பேச ஆரம்பித்தால், அவர் சொன்ன பதிலில் நாம நினைச்சதெல்லாம் எர்ரேஸ்…! ‘சார், ஒரு நல்லவன் கெட்டவன் கூட சண்டை போடுறான். அவன் இவனை என்ன செய்ய நினைச்சானோ? அதை இவனே செய்கிறான். நீ மட்டும் தீயவன் இல்லேடா… நானும் தீயவன்தான்னு சொல்றதுதான் க்ளைமாக்ஸ். ‘நம்ம படத்தோட தலைப்பின் காரணம் இதுதான்’ என்றார் பிரசாந்த். டைரக்டர் ஹரியிடம் சிங்கம் 2 ல் பணியாற்றியவர்தானாம் இவர். அப்படியென்றால் ஆக்ஷன் இருக்குமல்லவா?
புதுமுகம் அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா என்ற பெங்களூர் ஃபிகரை கொண்டு வந்திருக்கிறார்கள். ‘ஹீரோ ஆறடி. ஹீரோயின் அஞ்சடி. வேணும்னுதான் அப்படி செலக்ட் பண்ணினோம். ஹீரோவோட மார்பு வரைக்கும் வளர்ந்திருந்தா போதும் என்று தேடியதில் சிக்கியவர்தான் இந்த வர்ஷா’ என்றார் பிரசாந்த். ஹீரோயின் குள்ளமாகதான் இருக்கணும்னு தேடுற அளவுக்கு கதையில் ஏதாவது விஷயம் இருக்கா என்றால், ஹீரோவும் டைரக்டரும் சேர்ந்தே உதட்டை பிதுக்குகிறார்கள். அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. பொதுவா ஆணைவிட பெண் குள்ளமா இருந்தா, டூயட் பாடும்போது நல்லாயிருக்குமேன்னுதான். வேற ஒண்ணுமில்ல என்று பிரசாந்த் சொன்ன பதிலை மெனக்கெட்டு செரித்துக் கொள்ள வேண்டியதுதான்.
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படம், சென்னையை சுற்றி சுற்றி எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு முக்கியமான கேரக்டரில் பிரபல டான்ஸ் மாஸ்டரும், பிரபுதேவாவின் அண்ணனுமான ராஜு சுந்தரம் நடிக்கிறாராம். அவர்தான் வில்லனா? என்றால், உதட்டில் விரல் வைத்து உஷ் என்கிறார் பிரசாந்த். எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா எப்படி என்கிற அவரது பதிலுக்கு மதிப்பளித்து விடு ஜுட்!