இரண்டாம் உலகப்போரின் போது பல பகுதிகளில் வீசப்பட்ட குண்டுகள் அவ்வப்போது, ஆங்காங்கே கிடைத்து வருகின்றன. இவ்வகையில், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் பகுதியில் கிடைத்த உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட 227 கிலோ எடை கொண்ட வெடி குண்டினை சமீபத்தில் கண்டுபிடித்த சிலர் அதை ஒரு பழைய இரும்புக் கடையில் போட்டு பணம் பெற்று சென்றுள்ளனர்.
கடையில் வேலை செய்த சிலர் இதனை செயலிழக்க வைக்கப்பட்ட குண்டு என்று கருதி, உடைப்பதற்கு முயன்ற போது, எதிர்பாராத விதமாக அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் 7 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். 19 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
வெடித்து சிதறிய உடல்களின் பகுதிகள் இரும்புக் கடையை கடந்து 200 மீட்டர் தூரத்தில் போய் விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். குண்டு வெடித்த அதிர்ச்சியில் சுமார் அரை கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பல கட்டிடங்கள் பயங்கரமாக அதிர்ந்தன.
இரும்புக் கடை அமைந்துள்ள கட்டிடத்துக்கு மேலே இருந்த மாடி வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், குண்டு வெடித்த இடத்தில் 3 மீட்டர் ஆழம், 4 மீட்டர் அகலம் கொண்ட பள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.