இஸ்லாமிய மற்றும் இந்திய வேலைப்பாடமைந்த அரிய வகை கலைப்பொருட்களின் ஏலம் ஒன்று கடந்த எட்டாம் தேதியிலிருந்து இன்று வரை லண்டனைச் சேர்ந்த கிறிஸ்டி நிறுவனத்தாரால் நடத்தப்பட்டது. அதில் இந்திய மொகலாய சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த அழகிய பச்சை மாணிக்க கல் பதக்கம் ஒன்று குரான் வாசகங்களுடன் விற்பனைக்கு வந்தது. 1597ஆம் ஆண்டினைச் சேர்ந்ததாக மதிப்பிடப்பட்ட இந்த பதக்கம் மொகலாயர்களின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது.
20,000 பவுண்டிற்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த பதக்கம் நேற்று விற்பனைக்கு வைக்கப்பட்டது. ஆனால் நிறுவனத்தின் கணக்கீட்டைவிட 14 மடங்கு அதிகமாக 2,90,000 பவுண்டிற்கு (சுமார் ரூ.3 கோடி) விற்பனை செய்யப்பட்டுள்ளது. பச்சைக் கல்லின் தரமும், அரச ஆதரவுடன் அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களின் நுணுக்கமும் ஏலதாரர்களை உற்சாகமாக இந்த விற்பனையில் ஈடுபட வைத்தது என்றும் இதுகுறித்த தொலைபேசி விசாரிப்புகளும் அதிகம் வந்ததாகவும் ஏல நிறுவனத்தினர் குறிப்பிட்டனர்.
17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மற்றொரு மொகலாய காலத்திய பச்சை மாணிக்க கல் பதித்த குத்துவாள் ஒன்றும் கிட்டத்தட்ட இரண்டு கோடிக்கு விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது. இவை இரண்டையுமே மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த கலைப்பொருட்களை சேகரிக்கும் ஆர்வலர் ஒருவர் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது.