சாதாரண தைலத்தை தடவினால் போதும், குணமாகிற தலைவலியை கூட ‘ஈசிஜி எடு… எக்ஸ்ரே அவசியம்… சி.டி ஸ்கேன் முக்கியம்’ என்று மிரட்டி பணம் பறிக்கிற ஆஸ்பிடல்கள் பெருத்துவிட்டன. அத்தனைக்கும் ஆசைப்படலாம். அது கூட தவறில்லை. ஆனால் அத்தனைக்கும் அச்சப்பட வைக்கிற இத்தகைய ஆஸ்பிடல்கள் நமக்காக நரக வாசலையே கூட தட்டிவிட்டு வருகிற கொடுமையை எங்கு போய் சொல்ல?
மக்களின் அன்றாட அவஸ்தையை யாராவது பிரபலம் சொன்னால் ஒரு ஆஸ்பிடலாவது திருந்துமல்லவா? அதைதான் செய்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். “ஒரு நாள் லேசான காய்ச்சல். ஆஸ்பிடலுக்கு போனேன். அது இதுன்னு எக்கச்சக்க டெஸ்ட் பண்ணி சுமார் ஒரு லட்சம் பில் போட்டுட்டாங்க. கடைசியில் எனக்கு டோலோ 650 கொடுத்து அனுப்பிட்டாங்க. சாதாரண பொதுமக்கள்ட்ட இப்படி பண்ணினா அவங்க என்ன பண்ணுவாங்க?” என்று வருந்தினார்.
மெய் என்ற படத்தின் பிரஸ்மீட்டில்தான் இந்த தகவலை சொன்னார் ஐஸ்வர்யா. அதை ஏன் இங்கு வந்து சொல்ல வேண்டும்? மெடிக்கல் உலகத்தில் நடக்கும் கொடுமைகளை சொல்கிற படம்தானாம் இது. அதை தன் பிரச்சனையோடு கனெக்ட் பண்ணினார் ஐஸ்.
‘மெய்’ படத்தில் வேறென்ன விசேஷம்? பிரபல மோட்டார் நிறுவனமான டி.வி.எஸ் நிறுவனத்தின் தயாரிப்பு இது. டி.வி.எஸ் ஐயங்காரின் பேரன்தான் இந்தப்படத்தின் ஹீரோ நிக்கி சுந்தரம்!
மெய்யாலுமே தேறுவாரா என்பதை மெய் வந்துதான் நிரூபிக்க வேண்டும்!