ஒரு ஸ்டெப் மேலே ஏறியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்! இதற்கு முன்பு அவர் நடித்த படங்களிலெல்லாம் சிரிப்பும், சந்தானமும் இருந்தார்கள். இந்த முறை அப்படியல்ல! ரத்தம் தெறிக்கும் சீரியஸ் கதை… அதில் உஷ்ணம் பறக்க உதைத்திருக்கிறார் வில்லன்களை. படத்தின் பெயரே கெத்து. அப்புறம் இது கூட இல்லேன்னா எப்படி? இந்த படத்தை இயக்கியிருக்கிறார் மான்கராத்தே பட இயக்குனர் திருக்குமரன்.
இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடி எமி ஜாக்சன். எமியை பற்றி ஊர் வாயால் கேட்பதை விட உதயநிதி வாயால் கேட்பதுதான் சரியாக இருக்கும். என்ன சொல்கிறார் அவர்?
“ரொம்ப தைரியமான பொண்ணு அவங்க. அதுவும் எங்க படத்துக்கு கேமிராமேன் சுகுமாராச்சே. எங்கெல்லாம் ஆபத்தான இடமோ, அங்கெல்லாம் கயிறை கட்டிகிட்டு இறங்கிடுவார். அதற்கப்புறம் எங்களை இறக்குவாங்க. எமிக்கு எந்த பயமும் இருந்ததா தெரியல. எல்லாருக்கும் முன்னாடி அவங்கதான் ஆர்வமா இறங்குவாங்க. ஒருமுறை ஷுட்டிங்ல அவர் உயிர் தப்பியதே பெரிய விஷயமாகிருச்சு”.
“நானும் கருணாகரனும் பைக்ல வந்துகிட்டு இருப்போம். முன்னாடி சைக்கிள்ல அவர் போயிட்டு இருப்பார். அது மலைச்சரிவு. லேசாக வளைவு வேற. எந்த அச்சமும் இல்லாம சைக்கிளை வேகமா ஓட்டிட்டு போறார். கொஞ்சம் விட்டா கீழே விழுந்து பெரிய ஆக்சிடென்ட் ஆகியிருக்கும். என் பின்னால் உட்கார்ந்திருந்த கருணாகரன் வேகமா இறங்கி ஓடி, அப்படியே எமியை சைக்கிளில் இருந்து தூக்கிட்டார். எமி மட்டும் கீழே விழுந்திருந்தா இந்த படம் ஜனவரிக்கு ரிலீஸ் இல்ல. அதுக்கு பிறகு எமி நடிக்கும் படங்களும் எப்போ நடந்திருக்குமோ?”
உதயநிதி சொல்ல சொல்ல, அந்த தமிழை புரிந்து கொண்ட எமியும் பெரிதாக ஒரு ரீயாக்ஷன் காட்டினார். இப்பல்லாம் நாம என்ன பேசினாலும் அதை புரிஞ்சுக்குறாங்க எமி என்றார் உதயநிதி. அப்படியே அவர் சொன்ன இன்னொன்றையும் கேளுங்க மக்களே… “இந்த படத்தின் பாடல் காட்சிக்காக ஊர் ஊரா சுத்தியிருக்கோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஓட்டல்ல தங்கியிருக்கோம். இதுவே வேற ஹீரோயினா இருந்திருந்தா, அதெல்லாம் முடியாதுன்னு மறுத்திருப்பாங்க. பட்… எமி ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தாங்க”
ஆமாம்… உதயநிதி சொல்ற அந்த வேற ஹீரோயின்ஸ் யாரு? நயன்தாரா அல்லது ஹன்சிகாவை தவிர வேற யாரை சொல்லப் போறார்?