சினிமாவும் அரசியலும் சிறந்த பொழுது போக்கு ஆகிவிட்டது மக்களுக்கு. இதில் இரண்டையும் தனித்தனியாக வைத்திருந்து என்ன பயன்? ஒன்றாக்கிவிடுவோம் என்று நினைத்திருக்கலாம். சினிமாக்காரர்களுக்கு மக்கள் கொடுக்கும் சப்போர்ட், தினம் ஒரு ஹீரோவை அரசியலுக்குள் இறக்குகிறது. ஏகப்பட்ட நடிகர்களின் அரசியல் என்ட்ரி வரிசையில் லேட்டஸ்ட் வரவு பி.குமரன். இவர் தைரியம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தவர். அதற்கப்புறம் வருசநாடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இவர்தான் இப்போது தேர்தலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
அதிமுக அமைச்சர்களில் ஒருவரான கோகுல இந்திராவை எதிர்த்து அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் பி.குமரன்.
“அதென்னங்க தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை மாதிரி நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்திடுது?” என்ற கேள்வியுடன் குமரனை சந்தித்தோம்.
“நான் தேர்தல் நேரத்துல மட்டும் கொடியை தூக்கிட்டு வர்ற ஆள் இல்லை. 2001 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு திருவள்ளுர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றிய தலைவரா பதவி வகிச்சிருக்கேன். அப்போது மிக குறைந்த வயதில் யூனியன் சேர்மன் ஆன ஒரே நபர் நான்தான். நான் செய்த சேவைகளை இப்போதும் என் பகுதி மக்கள் சொல்வாங்க. மாவட்ட ஆட்சித் தலைவரே பல முறை என்னை பாராட்டியிருக்கிறார். அதற்கான ஆதாரம் வச்சுருக்கேன். அதற்கப்புறம் அதிமுகவிலிருந்து வெளியேறி தனியா சொந்தக்கட்சி ஆரம்பிச்சேன். 2003 ம் ஆண்டு லட்சக்கணக்கான இளைஞர்களை திரட்டி மாநில மாநாடு நடத்தி, அங்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி இளைஞர் மாணவர் அமைப்பை முறையான அரசியல் கட்சியா பதிவு செய்தோம். நான் ஏதோ திடீர்னு வந்திடல… அதுபோல சினிமா கவர்ச்சியை வச்சும் அரசியல் செய்யல. நான் யூனியன் சேர்மன் பதவி வகிச்சது 2001 ல். என்னுடைய தைரியம் படம் வெளிவந்தது 2010 ல். வருசநாடு இந்த சம்மருக்கு வருது. இந்த தேர்தலில் நான் நிச்சயம் ஜெயிப்பேன். எனக்கு மாணவர்கள் பலம் இருக்கு” என்றார் குமரன்.
நீங்க சொல்ற மாணவர்கள் பதினெட்டு வயசுக்கு மேலே இருக்கிறவங்கதானே குமரன்?