‘இவரு மட்டும் மாட்டேன்னு சொல்லியிருந்தா இந்தப்படத்தையே எடுத்திருக்க மாட்டேன்’ என்று ஒவ்வொரு பிரஸ்மீட்டிலும் யாராவது ஒரு நடிகரை புகழ்ந்து வைப்பார்கள் இயக்குனர்கள். கடைசியில் படத்தை பார்த்தால், அந்த நடிகர் நடிக்காமலிருந்தால் கூட இன்னும் சிறப்பாக இருந்திருக்குமே என்று தோன்றும். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ படத்திலும் அப்படியொரு புகழ்ச்சி.
தன்னை நோக்கிய அந்த புகழ்ச்சியை தக்க வைத்துக் கொள்வாரா பசுபதி?
‘ஒரு பேச்சுக்கெல்லாம் சொல்லல. நிஜமாகவே இந்தப்படத்தில் பசுபதியின் பர்பாமென்ஸ் பிரமாதம்’ என்று பேச ஆரம்பித்தார் அ.இ.சா படத்தின் இயக்குனர் அவினாஷ் ஹரிகரன். அதிலும் கொஞ்சம் உண்மை இருக்கதான் செய்கிறது. வதவதவென படங்களில் நடித்துத் தள்ளுபவரல்ல பசுபதி. அவர் மனசுக்கு ஒட்டாத படங்களை, இடது கையால் புறம் தள்ளிவிட்டு குப்புறடித்து தூங்கக் கூட செய்கிற ஆள்தான்.
இதுவரைக்கும் 30 படங்களுக்கு மேல் விநியோகம் செய்திருக்கும் ஆரா சினிமாஸ் நிறுவனம்தான் இந்தப்படத்தை முதன் முறையாக தயாரித்திருக்கிறது. இந்த 30 படத்திலும் ஆரா நிறுவனம் கற்றுக் கொண்டது என்ன தெரியுமா? ஆடியன்ஸ் எதை சொன்னா ரசிப்பான். எதை சொன்னா ரசிக்க மாட்டான் என்பதை. “இந்தப்படத்தை நான் தயாரிக்க காரணமே அந்த கணக்குதான்” என்றார் ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ்.
‘சரி… இது முழு நீள அரசியல் படமா?’ என்றால், “ஐயய்யோ. அதெல்லாம் இல்ல” என்கிறார் இயக்குனர் அவினாஷ். மூன்று பேரின் வாழ்வில் ஒரு அரசியல்வாதி ஏற்படுத்துகிற திருப்பம் என்னவாக முடிகிறது என்பதுதானாம்.
படம் மட்டும் நல்லாயில்லேன்னா, வீட்டுக்கு ஆட்டோவ அனுப்பிர வேண்டியதுதான்!