எலிசபெத் மகாராணியின் காதில் தொங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால், எத்தனை அடி ஆழத்தில் கிடந்தாலும் வைரம் கிளம்பி மேலே வரும்! அப்படிதான் சிலரது வெற்றிப் பயணங்கள் அமைகின்றன. அதுவும் அஜீத், சிவகார்த்திகேயன் போல தானே முளைத்த சுயம்புகள் மாதிரி…! இன்றைய தேதிக்கு எல்லாருடைய பார்வையையும் தன் பக்கம் திரும்ப வைக்கிற நடிகராகி விட்டார் மா.கா.பா ஆனந்த். விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருந்தாலே போதுமே, தானாகவே அவர்கள் தமிழக தாய்மார்களின் எங்க வீட்டு பிள்ளை ஆகி விடுவார்களே?
இப்படி தினந்தோறும் அசுர வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் ஆனந்த் நடித்து வெளிவந்த ஒரே படம் வானவராயன் வல்லவராயன். அதற்குள் அவர் கையில் நான்கு படங்கள். ஒவ்வொன்றாக வெளிவரும் போலிருக்கிறது. மா.கா.பா ஆனந்த் தனி ஹீரோவாக நடித்து திரைக்கு வரும் முதல் படம் அட்டி. இப்படத்தின் இயக்குனர் விஜயபாஸ்கர். அஷ்மிதா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
அதென்னய்யா அட்டி? இப்படியொரு கேள்வியை கேட்காதவர்கள் இருக்க முடியாது. எல்லாருக்கும் ஒரே நேரத்தில் பதிலை சொல்லிவிட்டால், கொசுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாமே? ஒரு ஐடியா செய்தார் விஜயபாஸ்கர். படம் ஆரம்பிப்பதற்கு முன்பே, அட்டி என்றால் என்ன? என்பதற்கு அருஞ்சொற்பொருள் விளக்கம் கொடுத்துவிடுவதுதான் அது. அதையும் பொருத்தமான ஒருவரை விட்டு சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்தவரின் மனசுக்குள் பச்சக்கென்று வந்து நின்றவர்தான் விஜய் சேதுபதி.
அவரு சொன்னால்தான் பொறுத்தமா இருக்கும்னு தோணுச்சு. இந்த படத்தை மொத்தமாக வாங்கி வெளியிட முன்வந்த இசையமைப்பாளர் சுந்தர்சி பாபுவிடம் சொன்னேன். அவர் விஜய் சேதுபதியிடம் பேசியதுதான் தாமதம். அதுக்கென்ன? சொல்லிட்டா போச்சு என்று பெரிய மனசு பண்ணினார். உடனே டப்பிங் தியேட்டருக்கு பேசிக் கொடுத்துவிட்டு போனார். அவருக்கு என் நன்றி என்றார் விஜயபாஸ்கர்.
டான்ஸ், பைட் என்று பக்கா லோக்கலாகவும், பக்கா கலக்கலாகவும் திரையில் தோன்றுகிறார் மா.கா.பா.ஆனந்த். வரவர ஹீரோக்களை உற்பத்தி செய்யும் இடமாகிவிட்டது விஜய் டி.வி.
ஆமா… அட்டின்னா என்னதான்ப்பா அர்த்தம்? பசங்க கூடி அரட்டையடிக்கிற இடமாம்! (ஒலகத்துல நாம தெரிஞ்சுக்கறதுக்குதான் எவ்வளவு விஷயம் இருக்கு?)