இன்று எல்லா படப்பிடிப்புகளும் ரத்து! சலசலப்புக்கு காரணம் கார்த்தி படம்?

‘எரியுற வீட்டுல புடுங்குன வரைக்கும் லாபம்’ என்ற நோக்கத்தோடுதான் திரிகிறது சினிமா தொழிலாளர்கள் அமைப்பு. ஒரு படத்தின் தயாரிப்பு செலவு என்பது ஒருபுறம் இருந்தாலும், ‘தயாரிப்பில் வீணான தண்டசெலவு’ என்ற பிரிவின் கீழ் பாழாய் போகிற பணம் கொஞ்ச நஞ்சமல்ல. பத்து தொழிலாளர்கள் இருந்தால் போதும் என்ற இடத்தில் ஐம்பது தொழிலாளர்கள் வலுக்கட்டாயமாக வந்து அட்ராசிடி பண்ணுகிற வேலையை கடந்த பல வருடங்களாகவே பார்த்து வருகிறது சினிமா தொழிலாளர் அமைப்பு. இதனால் தயாரிப்பாளர்களின் தாவங்கட்டையில் நிரந்தர சோகம் ஒட்டிக் கொண்டிருக்கிறது. போனால் போகட்டும் போடா என்ற மன நிலையில்தான் பல படங்கள் உருவாகி வருகிறது இங்கே. அப்படியொரு சோதனையை அன்றாடம் சந்தித்தப்படியே தன் ‘காஷ்மோரா’ படத்தை உருவாக்கி வருகிறார் ஞானவேல்ராஜா.

கடந்த சில தினங்களுக்கு முன் காஷ்மோரா ஷுட்டிங்கில் கடும் பஞ்சாயத்து. ஏதோ ஒரு அல்ப காரணத்திற்காக ஷுட்டிங்கை நிறுத்திவிட்டார்களாம் பெப்ஸி தொழிலாளர்கள். இப்படி அநியாயத்துக்கு தொல்லை கொடுத்தால் என்னாவது? இதை தயாரிப்பாளர் சங்கம் தட்டிக் கேட்க வேண்டும் என்று சங்கத்தின் கதவை தட்டிவிட்டார் காஷ்மோரா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.

இது வேண்டாத பொண்டாட்டி, வச்சு வாழவும் முடியாமல் விட்டுத் துரத்தவும் முடியாமல் கட்டிக்கொண்டு கண்ணீர் வடிக்கும் தயாரிப்பாளர்கள் இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தார்களாம். ஒரு நாள் அடையாள ஷுட்டிங் நிறுத்தம் என்பதுதான் அது. அதையும் உடனே செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவர்கள், இன்று எல்லா படப்பிடிப்புகளையும் நிறுத்திவிட்டார்கள். காஷ்மோரா படப்பிடிப்புக்கு தொல்லை கொடுத்து நிறுத்தியவர்கள் வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற தொந்திரவுகள் இனி தொடரக் கூடாது என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருக்கின்றன. ஒருவேளை அவர்கள் தொடர்ந்து பிரச்சனை கொடுத்தால், ஆறு மாசம் எல்லாத்தையும் இழுத்துப்பூட்டுங்கப்பா என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கிறது சங்கத்தில்.

விரைவில் நீண்ட கால ஸ்டிரைக் வருமா?

#KEGnavelrajakarthiKashmorakodambakkamshooting cancelSlideStrike
Comments (1)
Add Comment
  • Ghazali

    எதுக்கு ஸ்ட்ரைக் படப்பிடிப்புக்கு யூனியன் தேவையில்லை