பிருந்தாவனம் / விமர்சனம்

ஊருக்கே வலிக்கிற மாதிரி இடி மழை அடித்தாலும், தன் பாட்டுக்கு ‘தம்பூரா’ வாசிக்கிற ஒரே ஜீவன் ராதாமோகன்தான்! தமிழ்சினிமாவின் போக்கு சமயங்களில் வயிற்றுப் போக்கை விடவும் கேவலமாக மாறி, இதுதான் இப்பேதைய ட்ரெண்ட் என்று சரிகட்ட முயன்றாலும், தன் ஸ்டைலை ஒருபோதும் விட்டுக் கொடுக்காத ஜென்ட்டில்மேன் அவர். மொழி வரிசையில் பிருந்தாவனம்… அப்படியொரு சுகானுபவம்!

காது கேளாத வாய் பேச முடியாத அருள்நிதிக்கு ஒரே பொழுதுபோக்கு நடிகர் விவேக்கின் பட காட்சிகளை பார்த்து சந்தோஷப்படுவது. வாழ்நாளில் ஒருமுறையாவது அவரை சந்திக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவருக்கு அந்த விவேக்கே பிரண்டாக வந்து அமைந்தால்? சந்தர்ப்பம் அப்படியொரு சந்தர்ப்பத்தை அமைத்துத் தர… இன்னொருபுறம் அருள்நிதியை லவ் பண்ணிக் கொண்டிருக்கிறார் படபட பேச்சழகி தன்யா. சாதாரண முடி திருத்தும் தொழிலாளியான அருளை, டிபார்ட்மென்ட் ஸ்டோரின் முதலாளியான தன்யா காதலிப்பது சிக்கல்தானே?

ஆனால் அதற்காக மட்டுமல்ல… இன்னொரு முக்கியமான காரணத்திற்காகவும் தன்யாவின் காதலை ஏற்க மறுக்கிறார் அருள்நிதி. இந்த விரிசலை நடிகர் விவேக் எப்படி சரி செய்து இளசுகளை இணைத்து வைக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

அருள்நிதி தன் வாழ்நாள் முழுக்க கம்பீரமாக சொல்லிக் கொள்ள வேண்டிய படம் இது. இவருக்கு இது செட் ஆகுமா என்கிற டவுட் படாத ராதாமோகனுக்கும், தன் மீது வைத்த நம்பிக்கை உணர்ந்து முற்று முழுசாக இந்த கேரக்டருக்காக அர்ப்பணித்திருக்கும் அருள்நிதிக்கும் ஒரு சேர ஒரு ‘குலவை’ போட்டுவிடுவதுதான் சரி. எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் தன்னை விரட்டி விரட்டி காதலிக்கும் தன்யா மீது அருள்நிதி கோபப்படுகிற காட்சியில் ஒரு ஆண் ஜோதிகாவாகவே மாறி அசர விடுகிறார் மனுஷன்.

ச்சும்மா பட்டாம்பூச்சி போல படபடவென திரியும் தன்யாவின் கேரக்டர் மீது தனி காதலே வந்துவிடுகிறது. விவேக், அருள்நிதி, மற்றும் படத்தில் தன்னை கிராஸ் பண்ணுகிற அத்தனை பேரையும் ஓட்டு ஓட்டென்று ஓட்டுகிற துணிச்சலை பார்க்கும்போது தன்யாவுக்கு தனியாக ஒரு கட் அவுட் வச்சே கொண்டாடலாம்! தன் அப்பாவிடம், “என்னப்பா எனக்கு மாப்பிள்ளை பார்த்திருக்கீங்க? அவ்ளோ குண்டாயிருக்கான். அவன் போட்டோ டவுன் லோட் ஆகவே ரெண்டு நாளாச்சு” என்று கலாய்கிற போது தியேட்டரே துவம்சமாகிறது.

இந்தப்படத்தின் ஆகப்பெரிய பலமே பொன். பார்த்திபனின் வசனங்கள்தான். நகைச்சுவை சென்ட்டிமென்ட் என்று மனசை டச் பண்ணிக்கொண்டேயிருக்கிறது படம் முடிகிற வரைக்கும்.

வெகு காலம் கழித்து இந்தப்படத்தில்தான் விவேக் ரீ என்ட்ரி. வாயை திறந்தால் வெடி வெடிக்கிறது தியேட்டர். “நான் விட்ட கேப்புலதான்டா நிறைய பேரு வந்துட்டான். பரோட்டா சூரிங்கிறான். யோகி பாபுங்கிறான்…” என்று விவேக் புலம்புவது உண்மையிலும் உண்மை. படத்தில் வரும் வரிக்கியை (செந்தில்) விவேக் ஓட்டுகிற காட்சிகளெல்லாம் இன்னும் பல வருஷத்துக்கு காமெடி சேனல்களில் கட்டாய பாடம் ஆனாலும் சந்தேகமில்லை. அவர் நடிக்கிற எல்லா படங்களிலும் எரிச்சலூட்டும் செல் முருகன் கூட, இந்தப்படத்தில் கலக்கியிருப்பது கவனித்து பாராட்ட வேண்டிய அதிசயம்.

ராதாமோகன் படங்களில் எம்.எஸ்.பாஸ்கர் எப்போதும் ஸ்பெஷல் அல்லவா? இந்தப்படத்திலும் தனக்கு கொடுத்த ரோலை செவ்வனே சுமந்திருக்கிறார்.

ஊட்டியை பாலுமகேந்திரா படத்தில் பார்க்க வேண்டும் என்பார்கள். அதையேதான் இப்படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.விவேகானந்துக்கும் நினைவூட்ட வேண்டும்.

இசை- விஷால் சந்திரசேகர். படம்னா பாட்டு இருக்கணும். அதுக்காகவது கேளுங்க என்பது போலவே இருக்கிறது.

பிருந்தாவனம்- வேறு வழியேயில்லை. ‘கடைசி வரைக்கும் இருந்தாவனும்….’

-ஆர்.எஸ்.அந்தணன்

https://youtu.be/5YFXa6BRP6E

Actor Vivekarul nithibirundhavanam reviewdhanya ravichandranDirector Radha mohanVishal Chandrasekar
Comments (0)
Add Comment